2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்கள் விவகாரம்: மீண்டும் கடிதம்

Gavitha   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 தமிழக மீனவர்களையும், 119 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர், மீண்டும் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

 முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் மற்றொரு நிகழ்வை, இந்தக் கடிதம் மூலம் உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து,  எந்திரப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 5 தமிழக மீனவர்களை, 2ஆம் திகதியன்று,  இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை கங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பாக் நீரிணைப் பகுதியில் ஆண்டாண்டு காலமாக எங்கள் மீனவர்கள் அனுபவித்துவந்த வரலாற்றுப்பூர்வமான உரிமையில், இலங்கையின் அரச அதிகார்கள் தலையிடுவது தொடர்ந்து நடக்கிறது. ஆனால், சர்வதேச கடல் எல்லை விவகாரம், இந்திய உயர் நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் இருக்கிறது. மேலும் கச்சத்தீவு தொடர்பாக,  இந்தியா, இலங்கை நாடுகள் இடையே 1974, 1976ஆம் ஆண்டுகளில் உருவான ஒப்பந்தங்களை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக அரசும் இணைந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு, பெப்ரவரியிலிருந்து பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை, இலங்கை அரசு இன்னும் விடுவிக்கவில்லை. அவர்களின் ஒரே வாழ்வாதாரமான அந்தப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், தமிழக மீனவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர்.

அந்த வகையில், இலங்கை அரசின் பிடியில், தற்போது 119 படகுகள் உள்ளன. அவை ஆபத்தான சூழ்நிலையில் இலங்கை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் ஜனவரி 2ஆம் திகதியன்று நடந்த அமைச்சக அளவிலான கூட்டத்தில், படகுகளை விடுவிப்பதை பரிசீலிப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டாலும், அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.

இது குறித்து, இலங்கை அரசு அதிகாரிகளிடம், மத்திய அரசு கொண்டு சென்று, சேதமடையக்கூடிய சூழலில் உள்ள அந்தப்படகுகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். அதோடு அவற்றை உடனடியாக பயன்படுத்தும் வகையில் புதுப்பித்து மீனவர்களிடம் வழங்கவேண்டும்.

மேலும், கடந்த டிசெம்பர் 19ஆம் திகதியன்று உங்களுக்கு கொடுத்த மனுவின் அடிப்படையில், மீனவர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்துக்கான தொகையாக ரூ.1,650 கோடியை அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கோரிக்கையை ஜெயலலிதாவும், உங்களிடம் விடுத்திருந்தார்.

பாக் நீரிணைப் பகுதியைச் சேர்ந்த கடலோர மீனவர்களின் வாழ்க்கையை சீண்டும் இந்த புரையோடிப்போன பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைக் காண நீண்டநாள் ஆகிறது. எனவே, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 25 தமிழக மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 119 படகுகளையும் விடுவிப்பதற்கு, இலங்கை அரசிடம் எடுத்துரைக்கும்படி நீங்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடவேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X