2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மீள்குடியேற்ற செயலணி தமிழர்களுக்கு எதிரானது

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷவை போலவே இந்த அரசாங்கமும் செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மீள்குடியேற்ற செயலணியானது தமிழர்களுக்கு எதிரானது என்றும் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, பிரதமரிடம் கேள்விகளை கேட்கும் நேரத்தில் மீள்குடியேற்ற செயலணி தொடர்பில் கேள்விகளை கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு பிரதமர் வழங்கிய பதிலையடுத்து குறுக்கு கேள்விகளை கேட்டதன் பின்னரே சார்ள்ஸ் நிரமலநாதன், மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது, பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்தன் பின்னர், முதலாவது கேள்வியாக சார்ள்ஸ் நிர்மலநாதன், கேள்வியெழுப்பினார்.

வடக்கு மாகாணத்துக்கு மீள்குடியேற்ற செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதா, அதில், அமைச்சர்களான ரிஷாத் பதூர்தீன்,
டி.எம். சுவாமிநாதன் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் அங்கம் வகிக்கின்றார்களா? வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் செயலணியில் ஏன் சேர்த்துக்கொள்ளப்படவில்லை, அவ்வாறெனில், அச்செயலணியின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி வைப்பீர்களா? என்று கேள்விகளை கேட்டிருந்தார்.

அந்த கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில், வட மாகாண சபையின் நிர்வாகத்தில் தலையிடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை. இந்த விவகாரம் தொடர்பில் வட மாகாண சபையுடனும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனும் கலந்தாலோசிக்கப்படும். எனினும், மீள்குடியேற்ற நோக்கத்துக்காக மூன்று அமைச்சுக்களைக் கொண்டு நியமிக்கப்பட்ட குறித்த குழு, வட மாகாண சபையின் பொதுச் செயலாளருடன் இணைந்து பணி புரிவதாக தெரிவித்தார்.

பிரதமரின் பதிலில் திருப்தி கொள்ளாத சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, நீங்கள் குறிப்பிட்டது போல, நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்குவது நோக்கமில்லை. வடக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள், வட மாகாண சபையையும் முதலமைச்சரையுமே நம்பியுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் செய்கின்றபோது, முதலமைச்சரை உள்வாங்காமல், மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களை நீங்கள் நியமித்திருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையிலும் அதுதொடர்பில் அதற்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்செயலணியில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இடம்பெறவேண்டும் என்பதே எங்களதும், மக்களினதும் விருப்பமாகவுள்ளது. அமைச்சர்களுடன் சமஅந்தஸ்துள்ள அதிகாரத்தில் முதலமைச்சர் இடம்பெறவேண்டுமென்பதே எங்களது கோரிக்கை. இல்லாத மீள்குடியேற்றச் செயலணி எவ்வளவு உண்மைத்தன்மையற்றதாக இருக்கும் என்பதை எங்களால் சொல்லமுடியாது.

பிரதமர் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும், இச்செயலணியில் அங்கம்வகிக்கின்ற, வட மாகாணத்தைச் சேர்ந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். கடந்த ஆட்சியில், நீதிமன்றத்துக்கு கல்லால் எறிந்து, நீதவானை தொலைபேசியில் மிரட்டியவர், அவருக்கெதிராக நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில் அவருக்கு வழக்குக் கூட இருக்கிறது.

இப்படிப்பட்ட அமைச்சரை இச்செயலணியில் இணைத்திருப்பது தொடர்பில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். யுத்தத்துக்கு முன்னர், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு, அரசியல் பிரதிநிதிகளால் எதிர்ப்பு வெளியிடப்படவில்லை. மத்திய அரசாங்கத்தில் பல அமைச்சுக்கள் உள்ளபோதும், ஏன் செயலணி உருவாக்கப்பட்டது?.

இது, வடக்கு மக்களுக்கு எதிராக செய்யப்பட்டதாகவே நாம் பார்க்கிறோம். நல்லாட்சி என்ற போர்வையில் நீங்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களெனில், முதலமைச்சர் விக்னேஸ்வரனை இணைத்துக்கொள்ளவேண்டும்.

முதலமைச்சர் இல்லாத மீள்குடியேற்ற செயலணியை மக்கள் நம்பப் போவதில்லை. அவரும் இணைந்து செயற்பட்டால் அதில் நல்லிணக்கங்களைக் காணமுடியும். மீண்டும் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தோற்றுவிக்கும்.
மூன்று அமைச்சர்களுடன் நான்காவதாக, முதலமைச்சரை சேர்த்துக்கொள்ள முடியுமா? அதுதான் முக்கியமான விடயம்? கலந்தாலோசனைக் குழுவில் முதலமைச்சரை சேர்க்குமாறு கேட்கவில்லை, முடிவெடுக்கும் குழுவில் முதலமைச்சரை சேர்க்குமாறே கேட்கிறோம்.
நான் சொல்லும் விடயம் என்னவெனில், மத்திய அரசாங்கத்தின் முடிவை மாகாண அரசாங்கமும் மக்களும் செய்யவேண்டும் என்பதை நினைக்கின்றீர்கள். மஹிந்த செய்ததைத்தான் செய்வோம் என்றால் தாராளமாகச் செய்யுங்கள் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .