2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

மே 18: முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் பறந்தது

Editorial   / 2026 மே 10 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

  கனகராஜா சரவணன்

சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பிற்குச் சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில், மே 18-ஆம் திகதியை ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்விலேயே தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழக முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்க்குத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (10.05.2026), முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

வெற்றிக்கு வாழ்த்து: நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதற்தடவையிலேயே பாரிய சாதனையை நிலைநாட்டி, தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளமைக்குத் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய இனவழிப்பை நினைவுகூரும் வகையில், கடந்த 2009-ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆண்டுதோறும் மே 18-ஆம் திகதியை 'முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக' ஈழத்தமிழ் மக்கள் பிரகடனம் செய்துள்ளனர். அன்று முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

சட்டசபைத் தீர்மானம்: ஈழத்தமிழர்களது நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது ‘இனவழிப்பு’ என்றும், அதற்குச் சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம் என்றும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

முதலமைச்சருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை: அக்காலப்பகுதியில் தங்களது கட்சி நிறுவப்பட்டிருக்கவில்லை. எனினும், தற்போது தமிழக வெற்றிக் கழகம் முதலாவது தேர்தலிலேயே பெரும் வெற்றியீட்டி நீங்கள் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளீர்கள். ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பு என்பதையும், அதற்குச் சர்வதேச விசாரணை அவசியம் என்பதையும் வலியுறுத்தும் 2013-ஆம் ஆண்டு தீர்மானத்தையொட்டிய புதிய தீர்மானம் ஒன்றை, இம்மாதம் கூடும் சட்டசபையின் ஆரம்ப அமர்விலேயே நிறைவேற்ற வேண்டும். இது ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்தும்.

இத்தகைய நடவடிக்கை, கொடிய இனவழிப்புக்கு நீதி கோரும் ஈழத்தமிழர்களுக்குப் பெரும் பலமாக அமைவதுடன், உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் தங்களுக்கு நீங்காத இடத்தைப் பெற்றுத்தரும்,” என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .