2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘மாயக்கல்லிமலை வேண்டும்’

George   / 2016 நவம்பர் 04 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தீகவாபிக்குச் செல்லும் யாத்திரிகர்கள், மாணிக்கமடு, மாயல்கல்லி மலையில் இளைப்பாறி, தேநீர் அருந்திச் செல்வதற்கு இடமளிக்குமாறு, அம்பாறை கிரிந்திவெல விகாரையின் விகாராதிபதி சோமரத்ன தேரர், வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

“இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில், புராதன அடையாளங்கள் காணப்படுவதாக 19 இடங்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், மேற்படி இடத்தை மாத்திரமே புனரமைக்கவுள்ளோம். இதன் காரணமாக, அங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

 பெரும்பான்மையினக் குடியேற்றத்தை மேற்கொள்ளவோ, காணிகளைப் பிடித்துக்கொள்ளவோ நாம் முயற்சிக்கவில்லை. அப்பிரதேச மக்களின் பாதுகாப்பாக நாங்கள் இருப்போம்” என்றும் விகாராதிபதி கூறினார்.   

மாயல்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான கலந்துரையாடல், அம்பாறை மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் துஷித்த பி.வணசிங்க தலைமையில், புதன்கிழமை (02) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.   

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 19 இடங்களில் புராதன அடையாளங்கள் காணப்படுவதாகத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. இவற்றில் மாணிக்கமடு, மாயக்கல்லி மலையும் ஒன்றாகும்” என்றார்.   

“இலங்கையில் ‘தீகவாபி’ எனும் புண்ணிய பிரதேசம், பௌத்தர்களுக்கு மிகவும் பிரசித்தமானதாகக் காணப்படுகின்றது. அங்கு செல்லும் யாத்திரிகர்கள் இளைப்பாறுவதற்காக மாத்திரமே மாயக்கல்லி மலைப் பிரதேசத்தைப் பயன்படுத்தவுள்ளோம்.   

பௌத்தர்கள் வாழ்ந்த பழமைமிக்க இடமாகவும் அவர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள், வரலாறுகள் என்பன, மிகத்தெளிவாக மாயக்கல்லி மலையில் உள்ளன. மேலும், அங்கு 1975ஆம் ஆண்டில், தங்காலையிலிருந்து 25 பௌத்த மதகுருக்கள் வருகைதந்து, அந்த இடத்தில் சிறிய புத்தர் சிலையை வைத்து வழிபட்டுமுள்ளனர்.   

2013ஆம் ஆண்டில், மாயக்கல்லி மலையில், தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் ஆராய்ச்சி செய்து, அடையாளப்படுத்தியதுடன், 2014ஆம் ஆண்டு 10ஆம் மாதம் புராதன தொல்பொருள் அடையாளங்கள், திஸ்ஸ மன்னன் வரலாற்று ஆவணங்கள் மற்றும் பொருட்கள் காணப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது. அத்துடன், அவ்விடத்தில் பாதுகாப்புக் கற்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு காணப்படும் புராதன அடையாளங்களும் சிதைவுற்று அழிந்து வருகின்றன” என்று, தேரர் மேலும் கூறினார் .    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .