2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இனவழிப்பு இடம்பெற்றதை உறுதிப்படுத்தப்படலாம்: ஷெய்ட் ராட்

Gavitha   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கான விசாரணைக்குழுவால் நேற்று வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், இனவழிப்பொன்று இலங்கையில் இடம்பெற்றமை குறித்துத் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், ஆனால், அவ்வாறான விடயமொன்று எதிர்காலத்தில் கண்டுபிடிப்படுவது சாத்தியமற்றதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீதான விசாரணை அறிக்கையை வெளியிட்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில், கட்டமைக்கப்பட்ட நீதி மறுப்புக் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், வன்முறைகளை இலங்கை ஏற்றுக்கொண்டு மாற்றமடைய வேண்டுமெனத் தெரிவித்தார். மனித உரிமைகள் மீறலுக்குக் காரணமாக பல்வேறுபட்ட கட்டமைப்புகள், இன்னமும் காணப்படுவதாகக் கூறிய அவர், அவை கழற்றியெறியப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விசேட கலப்பு (ஹைபிரிட்) நீதிமன்றமொன்றை உருவாக்குவதே மிகவும் முக்கியமான பரந்துரையாகக் காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். என்னவாறான கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்படுகிறது எனக் கேட்கப்பட்டபோது, அதன் விரிவான திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். எனினும், சர்வதேச நீதிபதிகளினதும் வழக்குத் தொடுநர்களினதும் ஈடுபாடு அவசியமானது எனக் குறிப்பிட்டார். கலப்பு நீதிமன்றமானது, தேசிய ஈடுபாட்டுக்கு வாய்ப்புக் கிடைக்கும் அதேநேரத்தில், சர்வதேச ஈடுபாட்டையும் வழங்குமெனக் குறிப்பிட்டார்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, எந்த நபர்களினதும் பெயரைக் கொண்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இது மனித உரிமைகள் பற்றிய விசாரணையெனவும், குற்றவியல் நீதிமன்றத்தின் விசாணைகளிலேயே பெயர் விபரங்கள் வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் முன்னேற்றகரமான சமிக்ஞைகளை ஏற்றுக் கொண்ட ஷெய்ட், எனினும் புதிய அரசாங்கமும் போதிய ஒத்துழைப்புகளை வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியிருக்கலாம் என்ற அவர், ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை என்றார். அத்தோடு, கலப்பு நீதிமன்றம் பற்றி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துரையாடல்களெவற்றையும் நடத்தியிருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

30 வருடகாலப் போரின் காரரணமாக, இலங்கையின் பாதுகாப்புத் துறையும் நீதிக் கட்டமைப்பும், திரிக்கப்பட்டு, மாசுபடுத்துள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டார். தடுத்து வைக்கப்பட்டோர் மீதான பாலியல் வன்முறைகள் அதிகமாகக் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஆயுத முரண்பாட்டில் குற்றமிழைத்த ஒருவர் கூட குற்றஞ்சாட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, விசாரணை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை, மனித உரிமைகள் சபையின் 30ஆவது அமர்வு, பின்பற்றுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X