2026 மே 08, வெள்ளிக்கிழமை

SriLankan Airlines முன்னாள் CEO உயிர்மாய்ப்பு?

Editorial   / 2026 மே 08 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பான ஊழல் விசாரணைகள் குறித்து, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர், கடந்த 5ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம; 500,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதித்திருந்தார்.

இந்த நிலையில், கபில சந்திரசேனவுக்குப் பிணை வழங்குவதற்காக அவரது உறவினர்கள் எனப் பொய்க்கூறி முன்னிலைப்பட்ட இருவர், 'போலி உறவினர்கள்' எனத் தெரியவந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது.

இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்கு, குறித்த சந்தேக நபர்கள் தலா 15,000 ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, அவர் கொள்ளுப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .