அப்துல்சலாம் யாசீம் / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு, அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.
திருகோணமலை நகர சபைக் கேட்போர் கூடத்தில், நேற்று (29) மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் பற்றி வினவிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கருத்திற் கொண்டும், தமது கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்களின் கருத்துகளையும் பெற்றுக்கொண்டு அடுத்த வாரத்தில் கொழும்பில் வைத்து யாருக்கு ஆதரவளிப்பது பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை நகர சபைக் கேட்போர் கூடத்தில், அனைத்துக் கதவுகளும் மூடப்பட்ட நிலையிலும் பாதுகாப்புப் பிரிவினரையும் வெளியேற்றிய பின்னர் இரா. சம்பந்தன் எம்.பி தலைமையில், திருகோணமலை மாவட்ட அமைப்பாளர், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டுமென அதிகளவில் தெரிவித்ததாகவும் துரைரட்ணசிங்கம் எம்.பி தெரிவித்தார்.
இருந்தபோதிலும், வடக்கு, கிழக்கில் அனைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் வேட்பாளர் ஒருவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .