2025 ஜூன் 28, சனிக்கிழமை

அரசியல் தீர்வு காணும்வரை அரசு மீதான சர்வதேச சமூகத்தின் போர்க்குற்றச்சாட்டு நீடிக்கும்: சம்பந்தன்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

'இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றை காணும்வரை இலங்கை அரசாங்கம் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுக்களை சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வலிறுத்திக்கொண்டே இருக்கும்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

'போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்றால் இலங்கை அரசாங்கம் விரைந்து அரசியல் தீர்வு ஒன்றைக் கண்டேயாக வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார்.

மூதூர் பிரதேசத்திலுள்ள சீனன்வெளி, உப்பூறல் மற்றும் பள்ளிக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் நடைபெற்ற த.தே.கூ.வின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தன் கூறுகையில்,

'யுத்தம் முடிவுற்ற பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் மேற்கொண்டு வந்துள்ள அடாவடித்தனச் செயல்களை மாற்றியமைக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்தின் ஊடாக வலியுறுத்தும்.

சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் அகங்காரமாகவே பேசிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் உண்மையில் அரசாங்கம் திணறுகின்றது. சர்வதேச அழுத்தங்களை தவிர்ப்பதற்காக கடைசி ஆயுதமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று எண்ணியுள்ளது.

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசின் இத்தந்திரோபாயத்தை முறியடிக்க வேண்டும். ஆளுங்கட்சியிலிருந்து ஒரு தமிழ் வேட்பாளராவது தெரிவு செய்யப்பட முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

வெற்றி பெறும் தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களாக இருப்பதை எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டுக்கு வலுவூட்ட வேண்டும்' என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .