2025 மே 10, சனிக்கிழமை

கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் மாகாண அமைச்சர் வேண்டுகோள்

Super User   / 2012 நவம்பர் 22 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கடந்த 30  வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கிழக்கு மாகாணத்தில் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களிடம் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள மலேசியா மற்றும் ஈரான் நாட்டு தனியார் முதலீட்டாளர்களை திருகோணமலையிலுள்ள உவர்மலை விலங்கு பண்ணைகளுக்கு நேற்று புதன்கிழமை அழைத்துச் சென்றபோதே மேற்கண்ட வேண்டுகோளினை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் முன்வைத்தார்.இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

"கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசாங்கத்தினை மட்டும் நம்பிக் கொண்டிருக்க முடியாது. எனவேதான், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் எல்லாவிதமான வளங்களும் உள்ளன. முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்புகள் இங்கு உள்ளன. குறிப்பாக, விலங்குப் பண்ணைத் தொழிலில் முதலீடு செய்வதற்வதற்குரிய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன" என்றார்.

விலங்குப் பண்ணைகளுக்கு விஜயம் செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு - விலங்கு உற்பத்தி நடவடிக்கையில் நவீன முறைமைகளைப் பயன்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குழுவில், இந்திய – மலேசிய முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் அமீர் ஹம்ஸா பின் அப்துல் பஜர், மலேசிய பல்கலைக்கழக பேராசிரியர் தட்டோ டொக்டர் ஹாறூன் நிஸாம் மற்றும் இலங்கைக்கான முன்னாள் ஈரானிய தூதுவர் அலி றியா, உள்ளிட்ட பலர் அடங்கியிருந்தனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலும் வருகை தந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X