2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பாடசாலைக்கு அருகில் விருந்தினர் விடுதி அமைக்க முதலமைச்சர் தடை

Super User   / 2013 நவம்பர் 06 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்ஏ.பரீத்

கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு அருகில் விருந்தினர் விடுதி நிர்மாணிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தடைவிதித்துள்ளார்.

உலக வங்கியின் நிதியுதவியில் புறநெகும திட்டத்தின் ஊடாக கிண்ணியா நகர சபையினால் விருந்தினர் விடுதியொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.கிண்ணியா டெலிகொமிற்கு அருகிலுள்ள பழைய வைத்தியசாலை காணி என்று அழைக்கப்படும் காணியில் இந்த விருந்தினர் விடுதி அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் கிண்ணியா நகர பிதா டாக்டர் ஹில்மி மஹ்ரூபினால் நடப்பட்டது. எனினும் இந்த விருந்தினர் விடுதி கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு மிக அருகில் அமையவுள்ளதால் மாணவிகளின் கலாசாரத்திற்கு பாதிப்பதாகும் என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முறைப்பாடொன்றையும் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டமொன்று முதலமைச்சரினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் கிண்ணியா நகர பிதா டாக்டர் ஹில்மி மஹ்ரூப்இ கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் நாதிரா அமீன்பாரி மற்றும் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த விருந்தினர் விடுதியினால் மகளிர் கல்லூரிக்கு ஏற்படும் பாதகமான சூழ்நிலை தொடர்பில் இதன்போது விளக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த விருந்தினர் விடுதியின் நிர்மாண பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நகரபிதாவுக்கு முதலமைச்சர் உத்தரவிடடதுடன் பொருத்தமான வேறு ஒரு இடத்தில் விருந்தினர் விடுதியை அமைக்குமாறு தெரிவித்தார்.

அத்தோடு குறித்த காணியில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான கட்டிடம் ஒன்றினை தான் அமைத்து தருவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .