2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருமலை மாணவர்கள் ஐவர் படுகொலை: மூவருக்கு பிடியாணை

Kanagaraj   / 2014 மார்ச் 06 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் மாணவர்கள் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பன்னிரன்டு சந்தேக நபர்களில் மூன்று பேருக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிடியாணை  பிறப்பித்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி கிடைத்திருந்த மாணவர்கள் உட்பட ஐந்து தமிழ் மாணவர்கள் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலை நகரில் காந்தி சிலைக்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குற்றப்புலனாய்வு துறையினரால் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

12 சந்தேக நபர்களில் 9 பேர் மட்டுமே இன்று ஆஜராகியிருந்தனர். இந்த நிலையிலேயே நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜராக தவறிய மூவரையும் கைதுசெய்வதற்கான பிடி ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான உத்தரவை பிறப்பித்த மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா, வழக்கை எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம்; திகதி வரை விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார்.

அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு 32 சாட்சிகளுக்கும் அழைப்பாணை அனுப்புமாறு மற்றுமோர் உத்தரவையும் நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் பிறப்பித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .