2025 ஜூன் 25, புதன்கிழமை

தவிசாளர் விவகாரம்: மு.கா ஆதரவு கோரினால் ஐ.தே.க பரிசீலிக்கும் என்கிறார் இம்ரான்

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

கிழக்கு மாகாண சபைத் தவிசாளருக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வரவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கோரப்படுமிடத்து அது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என கிழக்கு மாகாணசபை ஐ.தே.க உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

தோப்பூரில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போது இவ்வாறு அவர் கூறினார்.

புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:

அளுத்கமை, பேருவளை சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு மாகாணசபையின் கடந்த அமர்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வந்த பிரேரணையை சபையில் சமர்ப்பிக்க தவிசாளர் மறுப்புத் தெரிவித்தார். இது தொடர்பில் அவருக்;கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது.

கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிஸுக்கு 7 ஆசனங்கள் மட்டுமே உள்ளன. எனவே இப் பிரேரணையை வெற்றிபெறச் செய்ய வேறு கட்சிகளின் ஆதரவு முஸ்லிம் காங்கிரஸுக்கு தேவை. இது விடயத்தில் அது ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவைக் கோருமாயின் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி அது கவனத்தில் கொள்ளப்படும்.

இன்று முஸ்லிம்களுக்கு அடையாளமாக உள்ள ஒரே மாகாணசபை கிழக்கு மாகாணசபையாகும் இம்மாகாணசபையில் மட்டுமே முஸ்லிம் முதலமைச்சர் இருக்கிறார். முஸ்லிம் காங்கிரஸின் தயவுடன் தான் இம்மாகாணசபை அரசாங்கத்தின் சபையாக செயற்படுகிறது. முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கா விட்டால் இம்மாகாண சபையின் நிலை வேறு விதமாக அமைந்திருக்கும்.

எனினும், இம்மாகாணசபை ஆட்சியின் முதுகெழும்பாக உள்ள முஸ்லிம் காங்கிரஸூக்கு முஸ்லிம் சமூகத்தின் நலன் சார்ந்த ஒரு பிரேரணையை இச்சபையில் சமர்ப்பிக்க முடியவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் தயவுடன் தவிசாளராக இருக்கின்றவர் அதற்கு இடங்கொடுக்க வில்லை என்றால் இதனை விட வெட்கமும், வேதனையும் வேறு என்னவாக இருக்க முடியும்.

முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தன்மானமுள்ளவர்கள் என்றால் குறைந்த பட்சம் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் நடுநிலையாகச் செயற்படும் என்ற ஒரு அறிவித்தலையாவது விட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. எனினும் தவிசாளருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்கள்.

இது விடயத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவு முஸ்லிம் காங்கிரஸுக்கு அவசியம் தேவை. இந்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கோரப்படுமாயின் முஸ்லிம் சமுகத்தின் நலன்கருதி அது கவனத்தில் கொள்ளப்படும். ஏனெனில் சுதந்திரம் முதல் இன்று வரை முஸ்லிம்கள் விடயத்தில் கூடுதல் அக்கறையோடு செயற்படுகின்ற கட்சி ஐக்கிய தேசியக்கட்சியாகும்.

எனினும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் அரசுக்கும் அவர்களுக்குமிடையிலான கொடுக்கல் வாங்கல்கள் அதற்கு இடங்கொடுக்காது.  இந்த கொடுக்கல் வாங்கல் விடயத்தை அரசு முஸ்லிம் காங்கிரசுக்கு இதுவரை ஞாபகமூட்டியிருக்கும். இதனால் முஸ்லிம் காங்கிரஸ் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போய் விடும். எனவே, வழமைபோன்று அரசுக்கு முட்டுக்கொடுக்கின்ற பணியை இக்கட்சி கச்சிதமாகச் செய்யும்.

எனது இந்த எதிர்வுகூறலின் உண்மை நிலையை முஸ்லிம் சமுகம் விரைவில் அறிந்து கொள்ளும். முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தை எப்படி ஏமாற்றுகிறது என்ற உண்மைநிலை இதன் மூலம் தெரியவரும் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .