2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கட்சி மாறுவது அரசியல் தற்கொலையாகும்: இம்ரான்

Gavitha   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

ஆட்சி மாற்றத்துக்கான சிறந்த சூழ்நிலையொன்று நாட்டில் உருவாகியுள்ள இவ்வேளையில், ஆளுங்கட்சிக்கு தாவுவது என்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது என கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

'இம்ரான் மஹ்ரூபை அரசின் பக்கம் இழுக்க வலைவீச்சு' என்ற தலைப்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கம் இப்போது கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலைப் போன்று உள்ளது. இதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஐ.தே.கட்சியில் பலரோடு பேரப் பேச்சுக்களை அரசு ஆரம்பித்துள்ளது. என்னோடும் பேசப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் இக்கப்பலில் ஏறுபவர்களும் மூழ்க வேண்டிய நிலைதான் உள்ளது. இது அரசியல் தற்கொலை போன்றது.

எனக்கு அரசியல் முகவரியைப் பெற்றுத் தந்தது ஐக்கிய தேசியக்கட்சி தான். 2010இல் அரசியலில் பிரவேசித்த என்னை மிகக் குறுகிய காலத்தில் 2012இல் மக்கள் ஒரு மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்துள்ளார்கள். எனவே, என்னோடு மிகவும் இரக்கமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை கைவிட்டு அற்ப சுக போகத்துக்காக கட்சி தாவ நான் தயாரில்லை.

நான் வயதில் மிகவும் இளையவனாக இருந்த போதிலும் கட்சியின் கிழக்கு மாகாணத்தின் ஒரேயொரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் எனக்குரிய கௌரவத்தை ஐக்கிய தேசியக் கட்சி தந்திருக்கின்றது. திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் பதவியை எனக்குத் தந்ததன் மூலம் அரசியல் ரீதியாக அதிக நன்மைகளைப் பெறக் கூடிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

மூதூர்த்தொகுதி எனது தந்தையால் வளர்க்கப்பட்ட தொகுதி. எனவே, இங்கு எனது தந்தையை நேசித்த அனைவரும் என்னை நேசிக்கிறார்கள். அந்த வகையில் மூதூர்த்தொகுதியில் எனக்கு நிலையான வாக்கு வங்கி உண்டு. திருகோணமலைத் தொகுதி எனக்கு வழங்கப்பட்டதன் மூலம் மேலதிக ஆதரவாளர்களை என்னால் திரட்ட முடிந்துள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு ஆதரவாளர்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பை எனக்கு கட்சி தந்திருக்கிறது. இதனால்  ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு போதும் நான் துரோகம் செய்யப்போவதில்லை. எனவே, மக்கள் எவ்வகையிலும் குழப்பமடையத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .