2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் மக்கள் உள்நுழைய தடை

Thipaan   / 2015 மே 31 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருகோணமலை   சம்பூர்   பிரதேசத்தில் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும்  காணிகளில் மக்கள் உள்நுழைவதற்கு பொலிஸார், சனிக்கிழமை(30) தடை விதித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி பொலிஸார்  உள்நுழைவுத் தடை உத்தரவை அறிவித்தததையடுத்து, அங்கு துப்புரவு பணிகளில் ஈடுபட்டிருந்த காணிகளின் உரிமையாளர்களும் உள்ளூர் மக்களும்   தற்போது வெளியேறியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் கூறினார்.

இது தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'இதன் காரணமாக துப்புரவுப் பணிகள் மேற்கொள்வதற்கோ வெளியார் நுழைவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. காணிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டில்கள் மற்றும் கூடாரங்களும் மக்களால் அகற்றப்பட்டுள்ளன.

சனிக்கிழமையிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அந்த பகுதிக்குள் செல்வதில்லை' என்றும் நாகேஸ்வரன்  குறிப்பிட்டார்.

ஒன்பது வருடங்களின் பின்னர், தமது  பூர்வீக காணிகளில் விரைவான மீள்குடியேற்றத்தை  எதிர்பார்த்திருந்த  சம்பூர் பிரதேச மக்கள்  கடந்த ஒரு வார காலமாக காடுகள் அடர்ந்து போய்க் கிடக்கும் தமது காணிகளைத் துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

முதலீட்டு ஊக்குவிப்பு வலயததுக்காக  சுவீகரிக்கப்பட்டிருந்த 818 ஏக்கர் நிலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம் மாதம்  வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலின் பேரில்  மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக முதலீட்டு நிறுவனமொன்றினால்  உயர் நீதிமன்றத்தில் தற்போது மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு  மீதான விசாரணை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .