Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஜூன் 02 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வெருகல் பிரதேசத்தில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த சட்டவிரோத ஆற்று மணல் அகழ்வுக்கு இந்த வாரம் (01.06.2015) முதல் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வெருகல் பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
உள்ளூர் தேவைகளுக்காக பெறப்பட்ட ஆற்று மணல் அகழ்வு அனுதியைப் பயன்படுத்தி அளவுக்கதிகமான அளவில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வு இடம்பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.
இந்த விடயம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து குறித்த சட்டவிரோத மணல் அகழ்வுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட அனுமதியின்படி நாளொன்று 2 உழவு இயந்திரப் பெட்டிகளிலேயே உள்ளூர்த் தேவைகளுக்காக மணலை அகழ முடியும். 0.6 கியூப் (ஒரு உழவு இயந்திரப் பெட்டி கொள்ளும் அளவு) நாளொன்றுக்கு 1.2 கியூப் (2 உழவு இயந்திரப் பெட்டி மணல்) அகழ முடியும்.
ஆனால், இந்த அனுமதியைப் பயன்படுத்தி நாளொன்றுக்கு சுமார் 20க்கு மேற்பட்ட உழவு இயந்திரப் பெட்டிகளில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அகழ்வது தெரியவந்ததை அடுத்து ஆற்று மணல் அகழ்வதற்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது.
இது ஒருபுறமிருக்க வெருகல் பிரதேசத்தில் மணலைக் களஞ்சியப்படுத்தி வைத்து விற்பனை செய்வதற்கான அனுமதி எவருக்கும் வழங்கப்பட்டிருக்காத போதும் நீண்டகாலமாக அவ்வாறு களஞ்சியப்படுத்தி விற்பனை செய்வதும் தெரிய வந்ததையடுத்து அந்த செயற்பாடும் உடனடியாகத் தடை செய்யப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளர் தயாபரன் தெரிவித்தார்.
இவ்விதம் திருகோணமலை – மட்டக்களப்பு நெடுஞ்சாலைக்கு அருகிலேயே நிண்ட காலமாக ஆற்று மணல் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்தல் இடம்பெற்று வந்திருக்கின்றது.
வெளி மாவட்டங்களான பொலன்னறுவை, அம்பாறை மட்டக்களப்பிலிருந்து வரும் மணல் வியாபாரிகளுக்கு இவ்விதம் மணல் விற்பனை இடம்பெற்று வந்திருக்கின்றது.
குறித்த சட்ட விரோத மண் களஞ்சியங்கள் கைப்பற்றப்பட்டதோடு அரசாங்க அதிபரின் உத்தரவுக்கமைய இத்தகைய மணல் அகழ்வும் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த அளவுக்கதிகமான ஆற்று மணல் அகழ்வின் காரணமாக நாதன்ஓடை அணைக்கட்டு உடைப்பெடுத்து பிரதான வீதியையும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளையும் ஊடறுத்து வெள்ளம் கரைபுரண்டோடி பாதிப்புக்களை ஏற்படுத்தும் விடயத்தையும் மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
தனிப்பட்ட ஓரிரு மணல் வியாபாரிகளின் சுயலாபத்திற்காக இந்தப் பிரதேச செயலாளர் பிரிவின் அனைத்துக் கிராமங்களுமே ஆபத்தைச் சந்திக்க வேண்டிய நிலைமையைத் தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரியதற்கிணங்க இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசத்தில் உள்ளூர் தேவைகளுக்காக மணல் அகழ்வதற்கு ஆறு பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
இதன்படி, மாதமொன்றுக்கு 35 கீயுப் மணலை அகழ்ந்து கொள்ள முடியும். ஆனால், ஒரு மாதத்துக்கான மணல் அகழ்வு அளவை அவர்கள் ஒரு நாளிலேயே 35 கீயூப் ஆற்று மணல் சட்டவிரோதமாக அகழப்பட்டிருப்பது தெரியவந்திருக்கின்றது.
இது ஒரு புறமிருக்க இந்த ஆற்று மணல் அகழ்வு வேலைகளுக்கு சிறுவர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் தெரியவந்தததை அடுத்து அதற்கு எதிராகவும் நடடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளர் எம். தயாபரன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago