Editorial / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

"CSK அணியில் ஆட மாட்டேன்".. தோனி எடுத்த முடிவு.. முழு உடல் தகுதியுடன் இருந்தும் விளையாட மறுப்பு 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி காயம் காரணமாக இதுவரை நடந்த போட்டிகளில் விளையாடவில்லை.
அவர் தற்போது முழு உடல் தகுதியை எட்டிய பிறகும் ஆடும் லெவனில் இடம்பெறாமல் தொடர்ந்து வெளியே அமர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோனி ஏன் இன்னும் களமிறங்கவில்லை, அவருக்கு என்ன ஆனது என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக தோனி 2 வாரங்கள் ஓய்வில் இருந்தார். அதன்பின் தீவிர பயிற்சிகளை மேற்கொண்ட அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார்.
சமீபத்தில் அவர் பிட்னஸ் டெஸ்டில் பங்கேற்று அதிலும் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடைபெற்ற வெளியூர் போட்டிகளுக்காக அவர் சிஎஸ்கே அணியினருடன் பயணித்தார்.
ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமடைந்து வருவதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இருப்பினும், தோனி முழு உடல் தகுதியுடன் தயார் நிலையில் இருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை. அப்படி இருந்தும் தோனி விளையாடாததற்கு முக்கிய காரணம், சிஎஸ்கே அணியின் தற்போதைய வெற்றிக் கூட்டணியை மாற்ற அவர் சிறிதும் விரும்பவில்லை என்பதுதான். தற்போதைய சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர்களின் வாய்ப்பை பறித்துக்கொண்டு, தான் களமிறங்கினால் அணியின் ஆட்டத்திறன் மற்றும் சமநிலை சீர்குலையும் என அவர் கருதுகிறார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் தோனி களமிறங்குவார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால், அங்கு அவருக்கு பதிலாக இளம் வீரர் கார்த்திக் ஷர்மா மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டார். மேலும், தோனி இல்லாத நிலையில் அணியின் விக்கெட் கீப்பிங் பணியை சஞ்சு சாம்சன் கவனித்து வருகிறார். சிஎஸ்கே அணி நடப்பு சீசனின் தொடக்கத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும், தற்போது மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
கடந்த போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள சிஎஸ்கே அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள 7 போட்டிகளில் குறைந்தது 5 வெற்றிகளைப் பெற வேண்டிய முக்கியமான கட்டத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட் தற்போது வலுவாக உள்ளது.
பிளே ஆப் ரேஸ் சூடுபிடித்துள்ள இந்த நெருக்கடியான நேரத்தில், அணியின் ஆடும் லெவனில் எந்தவொரு மாற்றமும் செய்ய வேண்டாம் என தோனி அணி நிர்வாகத்திற்கு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். தான் களமிறங்குவதை விட, வெற்றிப் பாதையில் பயணிக்கும் அணிக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்ற தோனியின் இந்த தன்னலமற்ற முடிவு சிஎஸ்கே அணிக்கு நன்மையாக் மாறுமா? அல்லது பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago