2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

போராட்டத்தை வெளிப்படுத்துமா இலங்கை?

Editorial   / 2017 ஓகஸ்ட் 24 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டி, இன்று (24) இடம்பெறவுள்ளது. பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள இப்போட்டி, பகல் - இரவுப் போட்டியாக, மதியம் 2.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.

முழுமையான இந்தத் தொடரின் டெஸ்ட் தொடரை, 0-3 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் தோல்வியடைந்திருந்தது. குறிப்பாக, முதலாவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு, ஒரு கட்டத்தில் 1 விக்கெட்டை இழந்து 139 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 216 ஓட்டங்களுக்கு வீழ்ந்திருந்தது.

பின்னர், பந்துவீச்சிலும் சோபிக்கத் தவறிய இலங்கை அணி, 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்திருந்தது.

இலங்கை அணி, இந்தத் தோல்வியைச் சமாளிப்பதற்கு, ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதிலும், கிரிக்கெட் சபை, அமைச்சர்கள், விமர்சகர்கள் என, இலங்கை அணி சந்தித்த விமர்சனங்களுக்கு மத்தியில், அவ்வணியின் இரசிகர்களும், எதிர்ப்பை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, 1ஆவது போட்டியின் முடிவில், இலங்கை அணியின் பஸ்ஸை மறித்து, இலங்கை இரசிகர்கள், ஆர்ப்பாட்டம் புரிந்திருந்தனர்.

எனவே, இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தப் போட்டியை, இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதே தற்போதுள்ள கேள்வியாக உள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவின் கருத்துப்படி, தோல்விக்கான பயமே, இலங்கை அணிக்கான அதிகமான தோல்விகளை வழங்கிக் கொண்டு வருகிறது. அவ்வாறாயின், அந்தத் தோல்விப் பயம் இல்லாமல், இலங்கை எவ்வாறு விளையாட முடியும் என்ற கேள்வி எழுகிறது.

இலங்கை அணியின் சாமர கப்புகெதர, தனது 100ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை, இன்றைய போட்டியில் விளையாடவுள்ளார். முதலாவது போட்டியில் ஒரேயோர் ஓட்டத்தை மாத்திரம் பெற்ற அவர், தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியிலேயே விளையாடி வருகிறார். எனவே, அவர் மீது, அதிகப்படியான அழுத்தம் காணப்படுகிறது. அடுத்ததாக, திஸர பெரேராவும், தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் காணப்படுகிறார்.

அணியாக, அனைத்து வீரர்களும் தங்களை நிரூபித்தாலேயே, இந்தப் போட்டியில், இந்திய அணிக்கான சவாலை, இலங்கை அணி வழங்க முடியும் என்ற நிலையில், அவ்வணி என்ன செய்யுமென்பதே, தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .