2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

விராத் கோலிக்கு அபராதம்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் முன்னணித் துடுப்பாட்ட வீரர் விராத் கோலிக்கு, அவரது போட்டி ஊதியத்தின் 30 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நடுவரின் தீர்ப்பை விமர்சித்தமைக்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், விராத் கோலிக்கு ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட போதே, இச்சம்பவம் இடம்பெற்றது.
அவரது துடுப்பில் பட்டு, அவரது காலில் பந்து பட்ட போதிலும், துடுப்பில் கண்டதைக் கவனிக்காத நடுவர், விராத் கோலி ஆட்டமிழந்ததாகத் தெரிவித்திருந்தார்.

அந்த முடிவை ஏற்காத கோலி, முதலில் துடுப்பைக் காட்டியதோடு, பின்னர் ஆடுகளத்தை விட்டு வெளியேறும் போது, நடுவரைப் பார்த்தவாறே சென்றதோடு, போட்டியின் உணர்வுகளை மதிக்காத சொற்களை வெளிப்படுத்தியிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அவருக்கெதிரான 30 சதவீத அபராதத்தை, போட்டி மத்தியஸ்தர் ஜெப் குரோ விதித்தார். தனது குற்றத்தை ஏற்றுக் கொண்ட கோலி, விதிக்கப்பட்ட அபராதத்தையும் ஏற்றார்.

அப்போட்டியில், 84 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களுடன் தடுமாறியிருந்த நிலையில், சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடிய கோலி, 49 ஓட்டங்களைப் பெற்று, அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததோடு, போட்டியின் நாயகன் விருதையும் வென்றிருந்தார். இப்போட்டியில், விராத் கோலியின் இனிங்ஸின் ஆரம்பக் கட்டத்தில், விராத் கோலியின் ஆட்டமிழப்பொன்று, நடுவரால் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .