
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவீந்தர் ஜடேஜாவிற்கு எதிராக தகாத வார்த்தை பிரயோகங்களை பாவித்தமைக்காகவும், அவரை தள்ளி விட்டமைக்காகவும் இங்கிலாந்து அணியின் வீரர் ஜேம்ஸ் அன்டர்சன் தண்டிக்கபப்ட்டுள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய போசன இடைவேளைக்கு மைதானத்தை விட்டு வெளியே செல்லும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. போட்டி நடுவர்கள் இந்த சம்பவத்தை பார்திருக்கவில்லை. எனவே அவர்கள் போட்டி மத்தியஸ்தரிடம் இது தொடர்பாக முறையிடவில்லை.
இருப்பினும் இந்திய அணியின் முகாமையாளர் இந்த விடயம் தொடர்பாக போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட்டதை தொடர்ந்து ஜேம்ஸ் அன்டர்சன் குற்றவாளியாக இனம் காணப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் சபை இந்த முறையீடு தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இந்தியா அணி இந்த சம்பவத்தை சிறிய ஒரு சம்பவம் என ஊடக அறிக்கையாக வெளியிட்டுவிட்டு முறையீடு செய்து பெரிதாக்கிவிட்டது என தெரிவித்துள்ளது. தாங்கள் ஜேம்ஸ் அன்டேர்சனுக்கு பக்கபலமாக இருப்போம் எனவும் ஜடேஜாவிற்கு எதிராக முறையீடு செய்யவுள்ளோம் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
14 நாட்களுக்குள் விசாரணை நடாத்தப்பட்டு அதன் படி அவரின் குறறம் நிரூப்பிக்கப்படும் வேளையில் 2 டெஸ்ட் போட்டி தடைக்கு உட்பட வாய்ப்புக்கள் உள்ளன. குறித்த குற்றத்திற்கு 4 தொடக்கும் 8 புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு 2 புள்ளிகளும் 1 டெஸ்ட் போட்டித் தடைக்கு அல்லது 2 ஒருநாள் சர்வதேசப் போட்டித்தடைக்கு சமனானவை. இதன் படி ஜேம்ஸ் அன்டர்சனுக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளைய தினம் இரு அணிகளுக்குமான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. எனவே நாளைய போட்டியில் ஜேம்ஸ் அன்டர்சன் விளையாடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும் அடுத்த இரண்டு போட்டிகளும் சந்தேகம் என்ற நிலை உருவாகும்.
டோனி உட்பட அனைவரும் இந்த சம்பவம் தொடர்பாக முறையிட்டனர். இது ஒரு பெரிய விடயம். ஒரு வீரரை எதிரணி வீரர் தொட முடியாது. அன்டர்சன் தள்ளியுள்ளார். எனவேதான் நான் இதை முறையீடு செய்தேன் என இந்திய அணியின் முகாமையாளர் சுனில் தேவ் கூறியுள்ளார்.