2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இடைக்கால தடை உத்தரவு கிடைக்குமானால் ‘நீதிமன்றம் செல்வோம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 23 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபையால் ஒரு மாத கால இடைக்கால தடை உத்தரவு கிடைக்குமானால் தாம் நீதிமன்றம் செல்லப்போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் 5 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக சபையால் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை தொடர்பாக கேட்டபோதே, இன்று (23) மேற்கண்டவாறு அவர்கள் குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“19.07.2018ஆம் திகதி நடைபெற்ற விசேட மாநகரசபை அமர்வில் உறுப்பினர் செல்வி மனோகரால் அண்மையில் நடத்தப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையில் வேலைவாய்ப்புக்களுக்கு ஆட்கள் உள்ளீர்க்கப்படும் போது, வெளிப்பாட்டுத்தன்மையுடன் திறந்த நேர்முகத் தேர்வின் மூலம் உள்ளீர்க்கப்பட வேண்டும்.

“பின்கதவால் அரசியல் ரீதியாக வேலையாட்கள் உள்ளீர்க்கப்படுவார்களானால் அதற்கெதிராக மக்களிடம் நேரடியாகச் செல்வோம் என ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை மீளப்பெறவேண்டும், இல்லையேல் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற பிரேரணை, 19.07.2018ஆம் திகதிய சபையில் வாதப்பிரதிவாதங்களுக்கோ, கருத்து கேட்பதற்கோ இடங்கொடுக்காது நேரடியாக வாக்கெடுப்புக்குச் செல்ல முற்பட்ட வேளையில், குறித்த செயற்பாடானது கருத்துச் சுதந்திரத்துக்கு முரணானது.

“அத்துடன், வெளிப்பாட்டுத் தன்மையுடன் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கோருவதற்கு மக்கள் பிரதிநிதிக்கு உரிமை இல்லையா? மக்களின் நலன்சார்ந்து அவர்களின் பிரதிநிதியாகவே மாநகரசபையில் நாம் அங்கம் வகிக்கின்றோம்.

“மக்களுக்காகவே நாங்களே தவிர, அரசியல் தலைமைகளுக்காக மக்களல்ல என்பதுவே எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் சிந்தனையாகும்.

“மாநகரசபையில் வெளிப்பாட்டுத்தன்மை வேண்டும் என்ற கோரிக்கை தவறானது அப்படி பேசமுடியாது என்று ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்க முற்படுவதை ஏற்க முடியாது எனக் கூறி, எமக்கான பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 05 உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தோம்.

“வெளிநடப்பு செய்வது சட்டத்துக்கு முரணானதோ, சபையை அவமதிப்பதோ என பொருட்படாது.

“நாம் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்ததாகவும் சபையில் அவமரியாதை செய்ததாகவும் அதனால் எம் 05 உறுப்பினர்களையும் ஒருமாத கால இரடக்கால தடை உத்தரவுக்கான பிரேரணை நிறைவேற்றியதாக, பத்திரிகை வாயிலாக அறிகின்றோம்.

“இதற்கான உத்தியோகபூர்வமான கடிதம் கிடைக்கும் பட்சத்தில், அதற்கு நீதி கோரி, நீதிமன்றம் செல்லத் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X