எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
“அவசர அவசரமாக கொண்டு வரப்படும் மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் நிராகரிக்கப்பட வேண்டும்” என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வலியுறுத்தியுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று (20) விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அதிரடியாக மாகாண சபைத் தேர்தல்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் ஊடாக மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான மற்றுமொரு யுக்தியை அரசாங்கம் மிக தந்ததிரமாக மேற் கொண்டுள்ளது. தேர்தல்களை பிற்போடுவதன் ஊடாக மக்களின் வாக்குரிமையைத் தொடர்ந்தும் பறிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஜனநாயக விரோதமானதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.
“சிறுபான்மை மக்களின் பிதிநிதித்துவத்தை கடுமையாக பாதிக்கக்கூடிய மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறையினை அரசாங்கம் அவசர அவசரமாக திணிக்க முயற்சிக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் இதனை நாடாளுமன்றத்தில் நிராகரிக்க வேண்டும்.
“அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடும் எண்ணத்தில் 20ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டு வந்தது. இது மாகாண சபைகளில் பல சர்ச்சசைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த 20ஆவது திருத்த சட்டமூலத்தை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் எனத் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனை நேற்றைய தினம் (19) சபாநாயகர் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
“எனவே, 20ஆவது திருத்த 5ட்டமூலத்தின் ஊடாக செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் கலையவுள்ள மாகாண சபைகளின் தேர்தல்களைப் பின்போடுவதற்கான அரசாங்கத்தின் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில், அதிரடியாக மாகாண சபைத் தேர்தல்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் ஊடாக, உடனடியாக நடத்த வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான மற்றுமொரு யுக்தியை அரசாங்கம் மிக தந்ததிரமாக மேற்கொண்டுள்ளது.
“அத்தோடு, மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் அவசர அவசரமாக திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிப்பதும் போதி கலந்துரையாடல்களுக்கு இடமளிக்காமல் அதனை நிறைவேற்ற முயற்சிப்பதையும் எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
“உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார முறை சிறிய கட்சிகளினதும் சிறுபான்மை மக்களினதும் போதிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யுமா என்ற பல சந்தேகங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய தேர்தல் முறையினை ஒரே நாளில் சமர்ப்பித்து அன்றே குழுநிலையில் விவாதித்து அதனை சட்டமாக்குவதென்பது ஜனநாயக விரோத செயலாகும்.
“புதிய தேர்தல் திருத்தமானது மாகாண சபைகளில் சிறிய கட்சிகளினதும் சிறுபான்மை மக்களினதும் போதிய பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பரந்தளவில் கலந்துரையாடப்பட்டே இறுதி முடிவுகளுக்கு வர வேண்டும். இவ்வாறான தேர்தல் முறைகளில் போதிய கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தி அதனை செய்வதற்கான போதிய அவகாசம் கடந்த இரண்டரை வருடங்களாக இந்த அரசாங்கத்துக்கு இருந்தது. அப்படியிருந்தும் அவ்வாறு செய்யாமல் இதனை ஒரே நாளில் சட்டமாக்க முயற்சிப்பதானது பாரிய சந்தேகங்களையும், கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
“எனவே, நாடாளுமன்றத்திலே அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள் குறிப்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த சட்டம் குறித்த போதிய கலந்துரையாடலுக்கான அவகாசத்தை அவர்கள் கோர வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசாங்கம் இதனை வாக்கெடுப்புக்கு விடுமாயின் நாடாளுமன்றத்தில் உள்ள சிறிய கட்சிகளும், தமிழ் - முஸ்லிம் கட்சிகளும் அதற்கெதிராக வாக்களித்து அதனை நிராகரிக்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025