2025 மே 19, திங்கட்கிழமை

‘தேர்தலில் பெண்கள் புரட்சி செய்ய வேண்டும்’

Editorial   / 2018 பெப்ரவரி 03 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், எம்.எம்.அஹமட் அனாம்

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், பெண்கள் புரட்சி செய்ய வேண்டும். தலைமைத்துவத்துக்கு அதிகமாக பெண்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆண்களும் பெண்களுமாக வெற்றிபெற வேண்டும்” என, இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கண்ணகிபுரத்தில் நேற்று (02) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடரந்து உரையாற்றுகையில்,

“அரசியல் தீர்வு ஏற்படுகின்றபோது, மத்திக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும். அதேபோன்று, உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகமான அதிகாங்கள் பகிரப்படவுள்ளன.

“உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்படும்போது, உங்களது கிராமங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை, நீங்களே வகுக்க முடியும். வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெறவும் மாகாணசபையிடமிருந்து தேவைகளை நிறைவேற்றவும் உங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு வரிகளை விதித்து, அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரம் கிடைக்கவுள்ளது.

“மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவதற்கு அதிகமாக முயற்சி செய்கிறார். எங்களிடமிருந்து அடித்துக்கொண்ட பணத்தை செலவு செய்கிறார்.

“இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாதன் காரணத்தால் இன விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எமது பெண்களை மோசமாக நடத்தினார்கள். அதற்கு பொறுப்பேற்க வேண்டிய போர்க்குற்றம்,  ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளது.

“இந்த நாட்டிலே, ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நினைத்தவர்கள் தென் பகுதியிலும் உள்ளார்கள் வடக்கு, கிழக்கிலும் இருக்கிறார்கள். எமக்கு மக்கள் இராஜதந்திர ரீதியாக செயற்பட்டதன் காரணத்தால்தான் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தார்.

“உலக நாடுகளின் ஆதரவு எமக்கு கிடைத்திருக்கின்றது. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பிக்கை வாய்ந்தவர்களாக தெரிவு செய்ய வேண்டும்.

“எமக்க எதிராக போட்டியிடுகின்றவர்கள் எம்மைப் பலவீனப்படுத்தி, எங்களது வாக்குப் பலத்தைக் குறைத்து, எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையை குறைத்துவிட்டால், உலக நாடுகளில் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்துவிடுவோம்.

“ஆயுத பலத்தோடு போராடிய சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்திருக்கின்ற போது, எங்களுடைய ஜனநாயக பலத்தை நாங்கள் இழந்துவிடக்கூடாது. அந்த நாட்டில் ஆட்சியை மாறுவதற்கு ஜனநாயக சந்தர்ப்பங்கள் உதவியாக இருந்தன. யாரும் படையெடுத்து இந்த நாட்டை கைப்பற்ற வில்லை. சதி செய்து ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. தமிழ் மக்கள் தெற்கில் இருந்த சிங்கள மக்களோடு இணைந்து தங்களுடைய வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சியை மாற்றினார்கள்.

“உலக நாடுகளுடன் இணைந்து எமது இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்துவிடக்கூடாது. இந்த காரணத்துக்காக இந்த தேர்தலில், எங்களுடைய மக்கள் பிளவுபட்டு எதிரிகளுக்கு வாக்களிக்காமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X