2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘தேர்தலுக்கு அஞ்சவில்லை; சட்டப்பிரச்சினையே காரணம்’

Editorial   / 2017 நவம்பர் 14 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

“அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றம்சாட்டுகின்றனர். அவ்வாறு  அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்தில் உள்ள சட்ட சிக்கல்கள் காரணமாகவே, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது” என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில், ஏறாவூரில் உள்ள சமூக நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு, ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நேற்று (13) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

“எந்த நேரத்திலும் எவ்வாறான தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதனை முகங்கொடுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆனால், நாட்டிலே கடந்த 40 வருடங்களாக இருக்கின்ற தேர்தல் சட்டம் மாற்றப்பட்டு, புதிய முறையில் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

“எனவே, உள்ளூராட்சி தேர்தல் புதிய வட்டார முறைப்படியே நடக்கின்றது. இதில் சட்டப் பிரச்சினைகள் உள்ளமையால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, அதனைச் சீர்செய்ய வேண்டியேற்பட்டது.

“எனினும், எதிர்வரும் ஜனவரி மாதம் இத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

“பழைய தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகள் மக்களின் தேவைகளை சரியான முறையில் நிறைவேற்றவில்லை. அதில் அதிகளவான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றன.

“இந்நிலையை மாற்றி தூய அரசியல் பயணத்துக்காக, எதிர்வரும் ஏறாவூர் நகர சபைத் தேர்தலில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் தலைமையிலான குழுவொன்றை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் களமிறக்கவுள்ளோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X