2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நாவலடி முஸ்லிம் மக்கள் உண்ணாவிரதம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலைச் சந்தி நாவலடியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை படையினர் விடுவிக்கும் வரை, காணியை இழந்த  முஸ்லிம் குடும்பங்கள், நேற்று (04) மாலையில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

நாவலடிச் சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாம் பகுதியில் இராணுவத்தினரால் கையக்கப்படுத்தப்பட்டு இருக்கும் 8 ஏக்கர் தனியார் காணியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியே, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட தாங்கள், 1968ஆம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் அங்கு வாழ்ந்தமைக்கான அனைத்து ஆவணங்களையும் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

1990ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவலடிப் பகுதியில் வசித்த மக்கள், இடம்பெயர்ந்து தற்போது நாட்டின் பல்வேறு இடங்களிலும் தாங்கள் அகதிகளாக வசித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

எனினும், தற்போதைய சுமுக சூழ்நிலையில் தமது பழைய குடியிருப்பு இடங்களை படையினர் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

தமது வீடுகள், கடைகள் உள்ளடங்கலாக அசையும் அசையாச் சொத்துகள் அனைத்தையும் படையினர் அழித்து விட்டே அந்தப் பகுதியில் இராணுவ முகாமை அமைத்துக் கொண்டதாக படை முகாமுக்கு முன்னால் கூடாரமிட்டு உண்ணாவிரதம் இருப்பவர்கள் தெரிவித்தனர்.

1968ஆம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்த நாம், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990ஆம் ஆண்டு எங்களின் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றோம்.

1990ஆம் ஆண்டு முதல் இராணுவ முகாம் அமைந்துள்ள எங்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதுடன், நட்டஈட்டையும் பெற்றுத் தந்து எங்களை மீளக் குடியேற்ற வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் தெரியப்படுத்தியபோதிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே உண்ணாவிரதம் இருக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளளோம்.

நாவலடிப் பகுதியில் தற்போதுள்ள  இராணுவ முகாம் 18 பேரின் காணிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாம் அமைக்கப்பட்டதன் காரணமாக 18 பேர் தமது வீடுவாசல்களை இழந்திருக்கின்ற போதிலும், 02 பேருக்கு மாத்திரம் பிரதேச செயலகத்தால் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, எஞ்சியுள்ள 16 பேரினதும் காணிகளை பெற்றுத்தர வேண்டும் என, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X