2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘வர்த்தமானி அறிவித்தல் கிடைத்ததும் தேர்தல் ஆணைக்குழு சாட்டையை சுழற்றும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவின் கையிலே கிடைத்ததும் தேர்தல் ஆணைக்குழு சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்து விடும்” என, தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன்,  கலப்புத் தேர்தல் முறை சட்ட ஏற்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதின் ஏற்பாட்டில், ஏறாவூர் அல்முனீறா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (28) இடம்பெற்றது.

நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் தெளிவூட்டலைச் செய்த தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தொடர்ந்து கூறியதாவது,

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரால் கேட்டுக் கொள்ளப்பதற்கமைவாக இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் அதியுயர் பீடமான நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டுள்ள கலப்புத் தேர்தல் முறை பற்றியும் அதற்குத் தோதான சட்ட ஏற்பாடுகள் பற்றியும் விளக்கவே வந்துள்ளேன்.

நாடாளுமன்றத் தேர்தல் சட்ட ஏற்பாடுகளுக்கமைவாகவே, இந்த விளக்கங்கள உங்களுக்கு அளிக்கப்படுகின்றன.

இதிலுள்ள சில ஏற்பாடுகள் சர்ச்சைக்குரிய விடயங்களாக இருக்கலாம். ஆனாலும் அவை இந்த நாட்டின் ஒரு கோடி 86 இலட்சம் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் சட்டமாக்கப்பட்டவையாகும். எனவே, இது கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவையாகும்.

தேர்தல் ஆணைக்குழு சட்டத்தை இயற்றுவதில்லை. சட்டத் திருத்தம் செய்வதுமில்லை.  தேர்தல் ஆணைக்குழு நாடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே, கவனத்தைச் செலுத்தும்.

அதேவேளை, எல்லை நிருணயம் சம்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ள ஆவணத்தில் உள்ள அச்சுப் பிழைகளையும் இன்ன பிற தவறுகளையும் திருத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மிக விரைவில் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வர இருக்கின்றன. அவை வெளிவந்ததும் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலை நடாத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சாரும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .