2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’வீட்டிலிருந்து கடமையாற்றுங்கள்’

Princiya Dixci   / 2020 நவம்பர் 01 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

2020ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிப் பயிலுநர்களை வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கு ஏற்றவாறு ஒழங்குகளை மேற்கொள்ளுமாறு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் கேட்டுள்ளார். 

இது தொடர்பாக, சகல திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சகல கிளைத் தலைவர்கள் ஆகியோருக்கு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரால் விசே‪ட அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவ்வறிவித்தலில் குறிபிடப்பட்டுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து அலுவலர்களையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

“இதனடிப்படையில், கீழ்வரும் விடயங்களை சகல அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

“அலுவலகங்களில் பதவிநிலை உத்தியோகத்தர்களின் கடமைகள் அத்தியாவசியமாக உள்ளதால், சகல நாட்களும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் சமுகமளிக்க வேண்டும் என்பதுடன், ஏனைய உத்தியோகத்தர்களில் 50 சதவீதமான உத்தியோகத்தர்களைக் கடமையில் ஈடுபடச் செய்வதுடன், தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் சகல உத்தியோகத்தர்களின் சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். 

“வீடுகளில் இருந்து கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் கடமைகளை, கிளைத் தலைவர்கள் நிறுவனத் தலைவரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்வதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

“தங்களது அலுவலகங்களில் கடமையாற்றும் 2020ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிப் பயிலுநர்களை, வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கு ஏற்றவாறு ஒழங்குகளை மேற்கொள்வதுடன், அவர்களுக்கான கடமைகள் தொடர்பான பட்டியலை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

“பொதுப் போக்குவரத்துக்களைப் பாவித்தும் வெளி மாவட்டங்களிலுமிருந்தும் கடமைக்கு வருகை தரும் உத்தியோகத்தர்களை அண்மையில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

“அத்தியாவசியமான கூட்டங்கள் தவிர, ஏனைய கூட்டங்கள் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

“பொதுமக்கள் தினமான திங்கட்கிழமையில் மாத்திரம் பொதுமக்கள் அவர்களது கடமைகளை அலுவலகத்தில் நிறைவேற்றுவதற்குரிய ஒழங்குகளை மேற்கொள்வதுடன், ஏனைய நாட்களில் அலுவலகங்களில் சமகமளிப்பதற்கு இடமளிக்காமல், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய படிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் பெயர், விலாசம், அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் போன்றவற்றை பதிந்துவைத்திருத்தல் வேண்டும்.

“அலுவலகங்களில் கடமையாற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், சில தவிர்க்கமுடியாத நோய் காரணமாக இலகுவில் நோய்த் தொற்றுக்குள்ளாகக் கூடிய உத்தியோகத்தர்கள் இருப்பின் அவர்களின் நலனையும் அலுவலகத்தில் அவர்களின் தேவைப்பாட்டையும் கருத்திற்கொண்டு வீட்டிலிருந்தவாறே கடமைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க பணிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .