2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளே நாம்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தாம் அரசாங்கப் பிரதிநிதிகள் அல்ல. மக்களின் குரலாக இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளே என நல்லிணக்கப் பொறிமுறைக்கான தேசிய செயலணியின் உறுப்பினரும் முன்னாள் பேராசிரியையுமான சித்திரலேகா மௌனகுரு தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்களிடம் கருத்தறியும் அமர்வு, வாகரைப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, பொறிமுறையின் நோக்கம் பற்றி செயலணியின் முன்பாக கருத்துகளை தெரிவிப்பதற்காக வந்த பொதுமக்களுக்கு அவர் தெளிவுபடுத்தினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களின் கருத்துகளை அறிந்து அதனைச் சமர்ப்பிப்தற்காக மக்களை நாம் நாடி வந்துள்ளோம். நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்துகளை அறிவதற்காக இச்செயலணி அரசினால் உருவாக்கப்பட்டிருந்தாலும், இச்செயலணியிலுள்ள பிரதிநிதிகள் எவரும் அரசாங்கப்; பிரதிநிதிகள் அல்ல.

நாம் மக்களின் குரலாகச் செயற்படுகின்ற சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளேயன்றி, வேறில்லை. இச்செயலணியில் சமூகத்தை நன்கு புரிந்துகொண்ட சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்' என்றார்.

'மக்களால் தெரிவிக்கப்படும் கருத்துகள் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ள அதேவேளை, ஏககாலத்தில் இந்த அறிக்கை பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படும். அது ஒருபோதும் இரகசியமாக வைக்கப்படமாட்டாது. ஊடகங்களில் அது ஆவணமாகக் கிடைக்கும். அது அனைத்துப் பொதுமக்களுக்கும் எட்டக்கூடியதாக செய்யப்படும்' என்றார்.

'இச்செயலணி, பரணகம ஆணைக்குழு போன்றோ அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட வேறு ஆணைக்குழுக்கள் போன்றோ அல்ல. ஆகையால் இச்செயலணியினரிடம் மக்கள் தங்களின் கருத்துகளையும் அபிலாஷைகளையும் தயக்கமின்றி வெளியிடலாம்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X