2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்'

Niroshini   / 2017 மே 06 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமைப்பட்டு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இந்த சமூதாயம் ஒன்றிணையாதுவிட்டால் எமது பிரச்சினைகளுக்கு என்றுமே தீர்வு காண முடியாது போய்விடும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்தார். 

இதேவேளை, சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் பாரிய பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அதற்காக குத்பாக்களை பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

காத்தான்குடி, ஜாமியதுல் ஜமாலியா அறபுக் கல்லூரியின் அல் மர்ஹூம் மீரான் முபீன் ஆலிம் மண்டப திறப்பு விழா, நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“ஒருவரை ஒருவர் விமர்சிப்பதாலோ, குறைகூறுவதனாலோ, குற்றஞ்சாட்டுவதனாலோ நாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வில்பத்து, இறக்காமம் பிரச்சினைகள் நிறைவடையும்போது வேறு எங்காவது இன்னுமொரு பிரச்சினையை கிழப்பிவிடுவார்கள். இதனை வெறுமனே பேசி காலத்தைக் கடத்துகின்ற சமூகமாக இல்லாது அதனை சரியான முறையில் முகம்கொடுக்க நாங்கள் தயாராக வேண்டும். 

பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாங்கள் பலமான சமூகமாக, சக்தியாக மாற வேண்டும். அவ்வாறு மாறாமல் ஒருவரை விமர்சித்துக் கொண்டு இருப்போமானால் எங்களை நாமே ஏமாற்றிய சமூகமாக மாறிவிடுவோம். 

இந்தச் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் பொறுப்பு உலமாக்களுக்கும் உள்ளது. வெறுமனே அரசியல் தலைவர்களை மாத்திரம் குறைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. உலமாக்களும் குத்பாக்களை பயன்படுத்த வேண்டும். அதற்கான தலைமையை ஏற்க வேண்டும். மார்க்கத்தை போதிப்பது மாத்திரம் தான் எங்களது கடமை என்று நின்றுவிடாது அதற்கு அப்பால் சென்று அரசியல் தலைமைகளை வழிநடத்தவும் ஒன்றுபடுத்தவும் வேண்டும். 

அரசியல் தலைமைகள் ஒன்றுபடாத போது, சமூக ஒற்றுமைக்காக குத்பாக்களை பயன்படுத்தவும் வேண்டும். அவ்வாறான ஒரு கட்டத்திலேயே இன்று முஸ்லிம் சமூகம் உள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X