2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

திருமண விருந்துபசார உணவு விஷமடைந்ததன் காரணமாக 466 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 16 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                    (கே.எஸ்.வதனகுமார், ஜிப்ரான், எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பள்ளியடிக் கிராமத்திலுள்ள  வீடொன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தின்போது வழங்கப்பட்ட மதியநேர உணவு விஷமடைந்ததன் காரணமாக  466  போ் இதுவரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 341பேரில் 95 பேர் சுகமடைந்து இன்று மாலை  வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தன் தெரிவித்தார்.

எனினும் இன்று மாலையில் மேலும் 20 பேர் அந்த உணவை உட்கொண்டவர்கள் திடீர் சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் முருகானந்தன் மேலும் தெரிவித்தார்.

மகிழடித்தீவு ஆதார வைத்தியசாலையில் 9 பேரும் ஆரையம்பதி ஆதார வைத்தியசாலையில் 10 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வைத்தியசாலைகளின் வைத்தியா்கள் கூறினா்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்திருமண வீட்டில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்கள் வயிற்று வலி, வயிற்றோட்டம், வாந்தி, மயக்கம் ஆகியன ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள்  மேலதிக சிகிச்சைக்காக   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
 
உணவு விஷமடைந்ததன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வார்ட்டுக்கு மாற்றப்பட்டுவருவதாகவும் வைத்தியர்கள் கூறினர்.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் மட்டக்களப்பு வைத்தியசாலைப் பொலிஸாரும் வவுணதீவுப் பொலிஸாரும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் இவர்களை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வைத்தியசாலைக்கு இன்று மாலை சென்று பார்வையிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .