2026 மே 14, வியாழக்கிழமை

மீன் பிடிப்பதற்கு தங்கூசு, டிஸ்கோ வலைகளை பயன்படுத்துவதற்கு தடை

Super User   / 2012 பெப்ரவரி 11 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

"மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் பிடிப்பதற்கு தங்கூசு வலை, டிஸ்கோ வலை, கட்டு வலைகளைப் பாவிக்க முடியாது.
அத்துடன், பெற்றோல் மெக்ஸ்களைப் பயன்படுத்தக்கூடாது, அதற்காக அரிக்கன், கடல் விளக்குகள் பயன்படுத்தலாம்" என மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் சம்மேளன தலைவர் எஸ்.விவேகானந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கடல்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மீனவ பிரதிநிதிகளுடனான சந்திப்பின் முடிவினை அறிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"இவ்வாறான வலைகளைப் பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கைது செய்யப்படுவார்கள். அதே நேரம் வர்த்தக நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டு பொலிஸாரால் கைது செசய்யப்படுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கரைவலை இழுக்கக்கூடாது, நண்டுக்காக சுழியோடுதல் தடை செய்யப்படுகிறது. வீச்சு இடத்தில் கூடு வைத்தல் தடை செய்யப்படுகிறது. அதேநேரம் கொட்டு வைத்து மீன்பிடியில் ஈடுபட்டு வருபவர்களின் பிரச்சினைகள் குறித்து ஒரு வார காலத்தினுள் மீனவர் சங்கங்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பொதுவான முடிவொன்றினைத் தருதல் வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில், மட்டக்களப்பு கடல்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ரி.ஜோர்ச், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ்.வரதராஜன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.கோகுலன், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மீனவர்கள் குறித்த பல்வேறுபட்ட பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .