2026 மே 07, வியாழக்கிழமை

இலங்கை - இந்திய உறவில் கீறல் விழாது: பசில்

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்
 
'இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீண்டு செல்கின்றது. அந்த உறவு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் இன்னமும் நெருக்கமடைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைவராக இருக்கும் வரை இந்த இலங்கை இந்திய உறவில் ஒரு கீறலும் விழப்போவதில்லை. அதனை எந்த சக்தியாலும் சீர் குலைக்க முடியாது' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
 
கிழக்கில் இந்திய அரசின் நாலாயிரம் வீடுகளை அமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த புதனன்று மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்ப்பற்று செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து பேசிய அவர்,
 
'இந்தக் கட்டத்தில் இந்தியப் பிரதமருக்கும் இந்திய மக்களுக்கும் பெருமனதோடு நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். யுத்தத்திற்கு முன்னர் மக்கள் எங்கு அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்களோ அங்குதான் இந்த வீடுகளை அவர்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். 
 
புதிய இடத்திற்குச் சென்று எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்குவதை விட தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணிலே தங்களுடைய பழைய உறவுகளுடன் வாழ்க்கையை மீளத் தொடங்குவதுதான் சரியென்று கண்டோம். இந்த விடயத்தில் இந்திய அரசும் இலங்கைக்கான இந்தியத் தூதரும் மிக உறுதியாக இருந்தார்கள்.
 
இந்த வீடுகளை அமைப்பதில் ஒப்பந்தக்காரர்களுக்கு அதிக இலாபம் கிடைக்க விடாமல் பார்த்துக் கொள்வதற்காக வீட்டின் உரிமையாளர்களே அவர்களது முழுமையான பங்களிப்புடனும் திருப்தியுடனும் இந்த வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும் என்பதுதான் இலங்கை, இந்திய அரசுகளின் திட்டமாக இருக்கின்றது.
 
அதனால்தான் கொந்ராத்துக்காரர்களுக்கு நாம் இந்த வீடுகளைக் கையளிக்கவில்லை. சுனாமி வீடமைப்புத் திட்டம் போன்று மக்கள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க ஒப்பந்தக் காரர்கள் தங்களது இஷ்டப்படி வீடுகளை அமைத்தது போன்று இந்த வீடமைப்புத் திட்டமும் ஆகி விடக்கூடாது. 
 
ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணத்தினையும் 4 தடவைகளில் பெறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம்.
 
கிழக்கு மாகாணத்தின் எல்லாப்பகுதிகளிலும் இந்த வீடடைப்புத் திட்டத்தை ஒரே நேரத்தில் ஆரம்பிப்தற்கான நேரகால வாய்ப்புக்கள் இல்லாதபடியால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் வாழும் இந்த ஏறாவூர்ப்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் இந்த வீட்டுத் திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கின்றோம்.
 
இந்திய வீடமைப்புத் திட்டத்தை நாம் இலங்கையிலே அமுல்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
 
இலங்கையில் வாழ்கின்ற சகல சமூகத்தவர்களும் இதன் நன்மைகளைப் பெறவேண்டும் என்கின்ற வகையில் கிழக்கு மாகாணத்திலே மூவினங்களும் வாழ்கின்ற ஒரு பிரதேச செயலகப் பிரிவாக ஏறாவூர்ப்பற்று தேர்ந்தெடுக்கப்பட்டது. 
 
இன்று இந்த வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த மங்களகம சிங்களவர்களுக்கும், பெரியபுல்லுமலை தமிழர்களுக்கும், உறுகாமம் முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூர்வீகக் கிராமங்களாகும்.
 
இதனூடாக சமூகங்களுக்கிடையில் ஒரு சிநேகபூர்வ உறவு நிலவுகின்றது. கொழும்பு மாநகரை எடுத்துக்கொண்டால் அங்கு வெளிநாட்டார் உட்பட எல்லா இனத்தவரும் வாழ்கின்றார்கள். அங்கு குழப்பங்கள் இல்லை.
 
இதற்கு முன்னர் நாம் பெரியபுல்லுமலைக் கிராமத்தில் வீட்டுத்திட்டத்திற்கு கல் நாட்டிவிட்டு நிமிர்ந்த பொழுது சிலர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.
 
அந்தத் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தவர் ஒரு வர்த்தகப் பிரமுகர் என்று அறிந்தேன். உண்மையில் அவருக்கு வீடு தேவையில்லை. ஆனால் அந்த இடத்திலே இந்த நிகழ்விலே அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் இனத்துவேஷத்தை உண்டு பண்ணும் காரியம்தான் தேவையாக இருந்தது. இவரைப் போன்றவர்களுக்கு இன்னமும் இலங்கையில் இனக்கலவரம் வேண்டும். அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ தாங்கள் சமூக ஒற்றுமையுடன் கால் நீட்டித் தூங்க ஓர் உறைவிடம் வேண்டும். 
 
நாம் யாரையும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து இந்த இடங்களில் குடியமரச் செய்யவில்லை. இங்கே பூர்வீகமாக வாழ்ந்தவர்களைத்தான் மீளக்குடியமரச் செய்திருக்கின்றோம். 
 
பாதிக்கப்பட்டவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் வழங்க எமது அரசு சித்தமாக இருக்கின்றது. 
 
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையோடு நாம் விளையாடிக்கொண்டு நாம் ஒருபோதும் அரசியல் செய்வதில்லை. நாம் என்ன செய்தாலும் குறைகண்டு பிடிப்பதிலேயே துஷ்டர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.
 
விமான நிலையங்களை, பெருந்தெருக்களை, நவீன நெடுஞ்சாலைகளை, துறைமுகங்களை, பெரிய பாலங்களையெல்லாம் அமைக்கின்றோம், வீடமைப்புத் திட்டங்களைக் கொண்டுவந்து அமுல்படுத்துகின்றோம், அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்கின்றோம், குளங்களைக் கட்டுகின்றோம், வைத்தியசாலைகளை, மின் நிலையங்களை அமைக்கின்றோம். ஆனால் என்ன செய்தாலும் நாட்டுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கும் புல்லுருவிகள் வேண்டுமென்றே நாட்டைக் குழப்ப நினைக்கின்றார்கள்.
 
பட்டாசுகளைக் கொளுத்தித்தான் விமானங்களை இறக்க வேண்டும் என்கின்றார்கள், அதிவேக நெடுஞ்சாலையால் விபத்துக்கள் அதிகம் என்கின்றார்கள், குளங்களைக் கட்டினால் அது நீச்சல் தடாகம் என்கின்றார்கள். வீடமைப்புத் திட்டத்தைக் கொண்டுவந்தால் அதில் இனத்துவேஷ கருத்துக்களை விதைக்கின்றார்கள்.
 
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீண்டு செல்கின்றது. அந்த உறவு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் இன்னமும் நெருக்கமடைந்துள்ளது. 
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைவராக இருக்கும் வரை இந்த இலங்கை இந்திய உறவில் ஒரு கீறலும் விழப்போவதில்லை. அதனை எந்த சக்தியாலும் சீர் குலைக்க முடியாது.
 
இந்தியா நமக்கு வீட்டுத் திட்டத்திற்கு மாத்திரமல்ல பல வழிகளில் உதவியிருக்கின்றது. இன்னும் பல வழிகளில் உதவ இந்திய அரசு காத்திருக்கின்றது. இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பது ஒரு சம்பிரதாய பூர்வ நிகழ்வுதான். நேரகாலம் கருதி இந்திய வீட்டுத்திட்டத்தை கிழக்கின் எல்லாக் கிரமங்களிலும் ஒரே நேரத்தில் தொடக்கி வைக்க முடியவில்லை.
 
அடுத்ததாக வாகரையில் இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படும். அதனையடுத்து கிழக்கின் ஏனைய பகதிகளுக்கும் அது விஸ்திரக்கப்படும்.
 
கிழக்கில் இந்த நாலாயிரம் வீடுகள் மாத்திரமல்ல இன்னமும் அதிக விட்டுத் திட்டங்களைத் தரவேண்டும் என்று நாம் இந்திய தூதரிடத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம். அதற்கு அவர்கள் இணங்கியிருக்கின்றார்கள்' என்றார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .