2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'மேற்கத்தேய நாடுகளுக்கு இங்கு பிரச்சினைகள் இருக்கவேண்டும்'

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 18 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா


மேற்கத்தேய நாடுகளுக்கு இங்கு பிரச்சினைகள் இருக்கவேண்டும். யுத்தம் இடம்பெறவேண்டும். அதன் மூலம் தாம் பிழைப்பு நடத்தவேண்டும் என்ற  எண்ணம் இருக்கின்றது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பட்டிப்பளைப் பிரதேசத்தில்  குடிநீர் விநியோக வேலைத்திட்டத்தை புதன்கிழமை (17)  ஆரம்பித்துவைத்த பின்னர், பிரதேச சபையில் நடைபெற்ற கூட்டத்தில்  உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னரே சுதந்திரமாக வாழத்தொடங்கினோம். இதை ஏன் நாம் குழப்பவேண்டும்?

பிரச்சினைகளுக்கு பின்னால் சர்வதேச சூழ்ச்சிகள் இருக்கின்றன. இலங்கை அபிவிருத்தி கண்டு வளர்ந்துவருவதை ஏனைய நாடுகள் விரும்பாது. 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருக்கும்வரை ஓர் அந்நியரும் எமது நாட்டினுள் நுழையமுடியாது. இதனாலேயே,  நாம் நிம்மதியாக வாழ்ந்துவருகின்றோம். அனைத்து இன மக்களும் அந்நியோன்யமாக வாழ்ந்துவருகின்றனர். 

தங்களுடைய அபிவிருத்திப் பணிகளை நியாயமான முறையில் கதைத்துச் செய்யமுடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எவ்வாறு தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றது.

வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியாவிலிருந்து புகையிரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏ -9 வீதி
அமைக்கப்பட்டுள்ளது.  வீடுகள் நிர்மாணித்து மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.   இவற்றையெல்லாம் செய்துகொடுத்த பின்னரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சண்டையிட்டார்கள்.   இது தமிழினத்துக்கே அநாகரிகமான செயல். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இன்று நாகரிகமான அரசியலை செய்துகாட்டுகிறோம். இங்கு அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள், பிரச்சினைகள் இல்லாமல் சுமுகமாக நடக்கின்றன. எவரும் எதையும் கதைக்கலாம். அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் இன்று நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இங்கு அபிவிருத்திப் பணிகளும்; முற்றுமுழுதாக முடிவடையவில்லை. தொடர்ந்து நடைபெறுகின்றன.

நீங்கள் வாக்களித்தவர்கள் வீடுகளில் உறங்குகின்றார்கள்.  நாங்கள் தொடர்ந்து உங்களுக்கு சேவைகளை செய்துவருகின்றோம். நீங்கள் அனைவரும் சேர்ந்து அவர்களை வாழவைக்கின்றீர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X