2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மைத்திரி அரசாங்கத்தில் தமிழர் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்: யோகேஸ்வரன்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 09 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய சூழல் ஏற்படுத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு  கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆட்சி மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற காரணத்தினாலேயே, மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

எக்காலத்திலும் இல்லாதளவுக்கு இம்முறை பெருந்தொகையான மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டதுடன், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாக்குகளை அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் மைத்திரிபால சிறிசேன தீர்த்துவைக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் எம்மிடம் முன்வைத்துள்ளனர். எமது சமூகம் நீண்டகாலமாக இதற்காக பாடுபட்டிருக்கின்றது.  அதற்கான முடிவு மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் கிடைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை இல்லாமல் செய்வதற்கு  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதையே வாக்களித்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருகின்றனர்.
யுத்தத்துக்கு முன்னும் பின்னும் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய சூழல் ஏற்படுத்தப்படவேண்டும்.

யுத்தக் குற்றச்சாட்டின் பேரில் அரசியல் கைதிகளாக சிறைகளில் இருக்கின்ற எமது உறவுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும். இவற்றையே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பை மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றுவார் என்றும் தமிழ் மக்கள் நம்புகின்றனர்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X