2025 மே 19, திங்கட்கிழமை

'டெங்கினால் குழந்தைகள், சிறுவர்களே அதிகளவில் மரணிக்கின்றனர்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 25 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

டெங்கு நோய் காரணமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் மரணமே கூடியளவில் சம்பவிக்கின்றன என்று  செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

ஐயங்கேணி தமிழ் வித்தியாலய அதிபர் எம்.மனோகரன் தலைமையில், பாடசாலை மட்ட டெங்கு கட்டுப்பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஹேன்டிகப் இன்ரநெஷனல் நிறுவனத்தின் அனுசரணையுடன் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'நகரை சுத்தமாக வைத்து டெங்கை கட்டுப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் போட்டி நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'மருந்தில்லாத உயிர்கொல்லி நோய் டெங்கு. இந்த நோய்க்கான  வைரஸை அழிக்கமுடியாது. இருப்பினும்,  உடலினுள் நோய் எதிர்ப்புச்சக்தி பலமாக இருக்கும்போது, நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்படுகின்றார்கள்.

உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குன்றியவர்கள், டெங்கு வைரஸின் தாக்கத்துக்கு உட்பட்டு உயிர் இழப்புக்களைச் சந்திக்கவேண்டி ஏற்படுகின்றது.

டெங்கு நோயை சுகாதாரத் திணைக்களத்தினால் மட்டும் கட்டுப்படுத்தமுடியாது. அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினாலேயன்றி, டெங்குவின் உயிர் ஆபத்திலிருந்து மனிதர்கள் தப்பமுடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற இடங்களில் டெங்கு நோயின் அபாயம் எச்சரிக்கக்கூடியளவுக்கு அதிகரித்துள்ளது' என்றார்.

இந்த நிகழ்வில்; ஐயங்கேணி தமிழ் வித்தியாலய அதிபர் எம்.மனோகரன், ஹேன்டிகப் நிறுவன திட்ட உத்தியோகஸ்தரும் இயன் மருத்துவருமான கிருஷாந்தி சிவசுப்பிரமணியம், சிரேஷ்ட மேற்பார்வை பொதுச் சுகாதார அலுவலர் எஸ்.கிருஷ்ணபிள்ளை, பொதுச் சுகாதார அலுவலர் வி.விஜயகுமார், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்;தர் ரீ.ஜெயசாந்தினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X