2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

100 நாட்களுக்குள் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு கோரிக்கை

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 100 நாட்களுக்குள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த 16 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்கள்,  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்குமாறு, சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு அவசரக் கடிதமென்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 23ஆம் திகதியுடன் 100ஆவது நாளை பூர்த்தி செய்துள்ள நிலையில், இந்த 100 நாட்களுக்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மட்டக்களப்பைச் சேர்ந்த 16 இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பூசா, மகசின், வெலிக்கடை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு அவர்கள் மீதான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இளம் குடும்பஸ்தர்களான இவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே சரணடைந்த பல இளைஞர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இவ்வாறான நிலையில் மீண்டும் கைதுகள் நடைபெறுவது, இந்த நாட்டில் தமிழ் இளைஞர்கள் சந்தோசமாக வாழமுடியாது என்பதை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ஜனநாயக வழிக்கு வந்து, திருணம் செய்து குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வந்தவர்கள். இவர்கள் உள்நாட்டில் வேலைவாய்ப்பை பெறமுடியாத நிலை காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று உழைத்துவிட்டு மீண்டும் தமது பிள்ளைகள் மனைவிமாரை பார்க்க வரும்போது, இவ்வாறான நிர்க்கதி நிலைக்குள்ளாக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் மனைவிமார், நாங்கள் இந்த நாட்டில் சமாதானமாக வாழவேண்டும், பயபீதி இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  வாக்களித்ததுடன், அவரின் வெற்றிக்காகவும் பாடுபட்டோம். எங்களுக்கு புதிய அரசாங்கம் செய்யும் கைமாறு இதுதானா என்று என்னிடம் கேட்கின்றார்கள்.

எனவே, சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சராகிய நீங்கள், இது தொடர்பில் கவனம் எடுத்து கைதுசெய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டும். அத்துடன் இதுபோன்ற கைதுகள் இனிவரும் காலங்களிலும் தொடராமல் இருக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பியுள்ள கடிதத்தில்; குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X