2025 மே 17, சனிக்கிழமை

வெபர் மைதானத்தை விரைவாக கையளிக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 மே 08 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, வெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் விரைவாக முடித்து, மட்டக்களப்பு மாநகர மக்களின் பாவனைக்காக கையளிக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் வியாழக்கிழமை (07) கோரிக்கை விடுத்தார்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி ஆகியோரிடமே இந்த கோரிக்கையை துரைரெட்ணம் விடுத்தார்.

கடந்த அரசாங்க காலத்தில் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மாநகரசபையுடன் எந்தவித முறையான அலுவலக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது, மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான வெபர் விளையாட்டு மைதானம் மத்திய அரசினால் பொறுப்பேற்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் கடந்த நான்கு வருடங்களாக இடம்பெற்று வருகின்றன.

இதற்காக மாநகரசபைக்குச் சொந்தமான பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த மூன்று உத்தியோகஸ்தர்களின் ஆளணிக்குரிய வாசஸ்தலங்கள் இடிக்கப்பட்டன.

இவ்வேலைகள் நீண்ட காலமாக இடம்பெற்று வருவதனால் மூன்று தேசிய பாடசாலைகள் உட்பட நகரப்பகுதியில் அமைந்தள்ள ஐந்து பிரபல்யமான பாடசாலைகள் இம்மைதானத்தை தமது உடல்கல்வி, மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றை நடத்த முடியாமல் உள்ளன.

இது எமது சிறார்களின் எதிர்காலத்தை வீணடிப்பதுடன் அவர்களது கல்வி செயற்பாடுகளிலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி 25க்கு மேற்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இம்மைதானத்தை பயன்படுத்தி தங்கள் விளையாட்டுத்தரத்தை மேம்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இம்மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இம்மைதானத்தினை  பாடசாலை மாணவர்களும் விளையாட்டுக் கழகங்களும் மாநகரசபை அனுமதியுடன் நிரந்தரமாக பயன்படுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

அபிவிருத்தி நோக்கத்துக்காக இடிக்கப்பட்ட அலுவலக உத்தியோகஸ்தரின் வாசஸ்தலங்கள் மூன்றையும் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணம் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .