2026 மே 09, சனிக்கிழமை

dd

’ஊவா மாகாண ஆசிரியைகள் சொந்த மாகாணத்தில் கடமையாற்ற கோரிக்கை’

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வியற் கல்லூரிகளில் டிப்ளேமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்து,  வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் ஊவா மாகாண ஆசிரியர்களை, அவர்களின் சொந்த மாகாணத்துக்குள்ளேயே கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் (15), பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஆளும் தரப்பு குழுக் கூட்டத்தின் போதே, தான் இந்த விடயத்தை முன்வைத்ததாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

பதுளை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் 300க்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படும் போது, ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு அது குறித்த தகவல்களை மத்திய கல்வி அமைச்சுக்கு வழங்கவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

அதன் காரணமாகவே, இந்தக் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தான் விடுத்த வேண்டுகோளுக்கமைய, தற்போது குறித்த ஆசிரியர்களை ஊவா மாகாண பாடசாலைகளுக்குள்ளேயே உள்வாங்க, பிரதமர், கல்வி அமைச்சர் ஆகியோர் இணங்கியுள்ளதாக கூறினார்.

மேலும், கண்டி பொது வைத்தியசாலையில், கடந்த 2 மாதங்களாக சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றமை குறித்து, சுகாதார அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், பதுளை மாவட்டத்தில் இருந்து கண்டி பொது வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும் சிறுநீரக நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார்.

வைத்தியர்களின் குறைப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய போது, அதன் அவசியதன்மையை உணர்ந்துக் கொண்ட சுகாதார அமைச்சர் உடனடியாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய பொறுத்தமான வைத்தியர்களை கண்டி பொது வைத்தியசாலைக்கு நியமனம் செய்து தடைப்பட்டுள்ள சிறுநீரக சத்திர சிகிச்சை பிரிவை விரைவாக இயங்கச் செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனரத்ன பணிப்புரை விடுத்தாக  அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .