2026 மே 01, வெள்ளிக்கிழமை

‘நாட்டின் இன்றைய நிலைக்கு ஜனாதிபதியே காரணம்’

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் கிளர்ச்சி நிலைக்கு, ஜனாதிபதியின் தான் தோன்றித் தனமான போக்கே காரணம் என்றுச் சாடியுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், ஜனாதிபதி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு செய்திருக்கும் துரோகத்தனமான  செயற்பாட்டை, பல்வேறு  தரப்பினரும், நிறுவனங்களும், சர்வதேச நாடுகளும் புரிந்துகொண்டுள்ளன என்றும் தெரிவித்தார்.   

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், “நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதில் எத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம் என்பதை, நாம் அறிவோம். அதேபோன்று நல்லாட்சி அரசங்கத்தில், நாம் அமைச்சுப் பதவியைப் பெற்று, மலையகத்தில் அரிய பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளோம். எமது தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிக் காட்டியுள்ளோம்” என்றார்.   

ஜனாதிபதியைப் பொறுத்தவரை, அவர் மலையக தமிழ் மக்களுக்கே, முதலில் துரோகம் இழைத்துள்ளார் என்று விமர்சித்த திலகர் எம்.பி அவருக்கு எதிராக செயற்பட்டவர்களை அள்ளி அணைத்து, அரியாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தார் என்றும் குற்றஞ்சாட்டினார்.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர், ஹட்டனில் நடந்த அதே நாடகத்தையே, இன்று தேசிய ரீதியாக ஜனாதிபதி அரங்கேற்றியுள்ளாரென்றும் அவர் விமர்சித்தார்.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் எண்ணிக்கையில் குறைந்த அணியினருக்கு, அமைச்சுப் பதவிகளை வழங்கி, இன்று நாட்டின் ஜனநாயகத்தைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் என்று  சாடிய அவர், அதேநேரம் தம்மை அழைத்து அவரது ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரினார் என்றும் தெரிவித்தார்.  

“நாம் என்றுமே, ஜனநாயகத்தின் பக்கமே நிற்போம். எப்போதும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் மக்கள் சக்தி, எம்மிடம் உள்ளது. எனவே, ஓய்வூதியத்தை எதிர்பார்த்து, அணி மாறி உறுப்பினராக இருப்பதற்கு, நாங்கள் அரசாங்க உத்தியோகத்தர் பதவியை வகிக்கவில்லை. எப்போதும் எமது மக்களின் பிரதிநிதியாகவே செயற்படுவோம்” என்றும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .