2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர்கள் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன். மக்கள் சேவைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வாக்குகளே இவை. இதனை எண்ணி நான் பெருமிதம்கொள்கிறேன்' என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பெ.இராஜதுரை தெரிவித்தார்.

'மக்களது பலவீனங்களுக்கு கோடிகளை வழங்கி தீனிபோட்டு வெற்றிபெறுவது என்பது எமது சமூகத்தில் இலகுவானதாகும்' என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர்,

' நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்களில் என்னுடைய பங்குபற்றுதலுக்கும் நுவரெலியா மாவட்ட நிதி ஒதுக்கீட்டில் கிடைத்த நிதியை கொண்டு மக்களுக்கு ஆற்றிய சேவைகளுக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளே இவை' என்றார்.

'நன்கு கல்விகற்ற சமூகம், புத்தி ஜீவிகள், மலையக மக்கள் நன்கு உணர்ந்து இந்தவாக்குகளை எனக்களித்துள்ளனர்.

இந்த தேர்தலானது என்னை பொறுத்தவரை பணத்தை மட்டுமே கொண்ட முதலாளிமார்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியாகவே கருதுகின்றேன். தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த ஒன்றரை மாதங்களாக நுவரெலியா மாவட்டத்தில் சொகுசு விடுதிகளை வாடகைக்கு எடுத்து, அங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாகனங்கள் மூலமாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

இவர்கள் நன்றாக கவனிக்கப்பட்டனர், உணவும் வழங்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. அதேபோல், பிரசாரங்களின்போது மக்களுக்கும் உணவு பொதிகள், வழங்கப்பட்டன.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வாறாக பணத்தை இறைத்து வாக்கு கேட்கும் முறைமையானது நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமே நடைபெற்றது என்பது ஆரோக்கியமற்ற நிலையாகும்.

முறையான கொள்கையின்றி மக்களது பலவீனங்களுக்கு கோடிகளை வழங்கி தீனிபோட்டு வெற்றிபெறுவது என்பது எமது சமூகத்தில் இலகுவானதாகும். ஆனால், அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சமூக பொறுப்பு என்பது மிக பாரியது. நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர்கள் அந்த பொறுப்புகளை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதே எமது அவா. அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

கடந்த 22 வருடங்களாக சட்டத்தரணியாக செயலாற்றி வரும் நான், எனது தொழிலில் என்றும் பின்தங்கியதில்லை. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பளாராக தொடர்ந்து செயற்படுவேன் என்பதோடு எனது மக்கள் சேவையும் தொடரும்' என அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .