R.Maheshwary / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் பாரபட்சத்துக்கு துணைபோகும் தரப்பாக ஒரு தரப்பும், அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அரசியல் ரீதியாக முன்கொண்டு செல்லாதவர்களாக மற்றொரு தரப்பும் செயற்படும் நிலைமையையே மலையகத்தில் காணமுடிகிறது என நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவத்துள்ளார்.
இந்த நிலையில் அத்துமீறும் தரப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் மலையக அரசியல் அரங்கம், தலைமைகொடுத்து முன்செல்லும் எனவும், பிரதேச செயலக விடயத்தில் மாவட்ட மக்களின் மனித உரிமை மீறப்பட்டதாக வலியுறுத்தி, மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தினை கையில் எடுத்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் செய்ய வேண்டிய பணிகளை மலையக அரசியல் அரங்கம் முன்கொண்டு செல்கிறது.
முதல் கட்டமாக நுவரெலியா மாவட்டம் முழுவதுமாக ஒரு மாத கால கையெழுத்து இயக்கத்தை நடாத்தி ,மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், மக்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்து மனுவை மாவட்டச் செயலாளர் ஊடாக ஜனாதிபதி, பிரதமர், துறைசார் அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
அடுத்த கட்டமாக அந்த மனு குறித்த விபரங்களுடன் மாவட்டத்தின் பிரஜைகள் என்ற வகையிலும் மலையக அரசியல் அரங்கத்தின் சார்பிலும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளோம்.
எனினும், அரசியல் ரீதியாக பாரபட்சம் காட்டப்படும் இந்த விடயத்தினை அரசியல் ரீதியாகவே அணுகி வென்றெடுக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .