2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புதிய கூட்டொப்பந்தத்தை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில், புதிய கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜே.வி.பியின், அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கம், ஹட்டன் நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, இன்று (09) விநியோகித்தது.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த கூட்டொப்பந்தம், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே, மீண்டும் கைச்சாத்திடப்பட்டது. 2015 ஆம் ஆண்டின்படி கணக்கிட்டால், 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குப் பின்னர், மீண்டும் ஓர் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டிருக்க வேண்டும். ஆனால், தொழிற்சங்கங்கள் அதனை செய்யத் தவறியுள்ளன.

எனவே, மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இத்துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

“பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், போலியான கூட்டொப்பந்தத்தை கைச்சாத்திட்டதனூடாக, தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டன” என்று, மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என். செல்வராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“கூட்டொப்பந்தம் முறையாக கைச்சாத்திடப்பட்டு வந்திருந்தால், புதிய ஒப்பந்தம், 2017.4.02 ஆம் திகதி, மீண்டும் கைச்சாத்திடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையக தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொண்ட போலியான ஒப்பந்தத்தினூடாக , தொழிலாளர்களின் உழைப்பை காட்டிக்கொடுத்து விட்டனர். எனவே, மீண்டும் புதிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட தோட்ட தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும்.

தற்போதைய அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்தினால், தோட்டத் தொழிலாளர்கள், குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நல்லாட்சி எனும் போலியான அரசு மற்றும் போலியான தொழிற்சங்கங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டன் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் முன்னெடுத்து வருகின்றது” என்றும் அவர் இதன்போது கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .