2026 மே 09, சனிக்கிழமை

’மலையக இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புக்கு புதிய பொறிமுறை’

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர் சேவைக்கு மட்டுமல்ல, இலங்கையிலுள்ள அனைத்து அரச துறைகளிலும் மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்றும் இதற்காக விசேட பொறிமுறையொன்று முன்னுரிமை அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில், இன்று (17) காலை நடைபெற்ற இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மலையக சமூகத்துக்கான அடிப்படை அரசியல் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் மிக சாதுர்யமான முறையில் வென்றெடுத்து வருவதாகவும் அந்தவகையில் அனைத்து அரச துறைகளிலும் மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதே தமது அடுத்த இலக்கு என்றும் கூறினார்.

இதற்கான பூர்வாங்க நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், தமது மக்கள் சார்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியால் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்றும் அந்தக்  கோரிக்கைகளில், “அனைத்து அரச துறைகளிலும் வேலைவாய்ப்பு” என்ற விடயம் பிரதான இடத்தை வகிக்கும் என்றும் கூறினார்.

குறிப்பாக, ஆசிரியர், சமுர்த்தி சேவைகளுக்கு மட்டுமல்ல, இலங்கையிலுள்ள அனைத்து அரச துறைகளிலும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்போது, மலையக இளைஞர், யுவதிகளை முன்னுரிமை அடிப்படையில் உள்வாங்கும் வகையில், விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படவேண்டும் என்றும் அதற்கு, தமிழ் முற்போக்குக்  கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என்றும் கூறினார்.

மலையகச் சமூகத்தக்கு, முன்பிருந்தே முழுமையாக அரசியல் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் வழங்கியிருந்தால், அவர்களும் தேசிய நீரோட்டத்தில் சங்கமித்திருப்பார்கள் என்றும் ஆனால், எந்தவொரு அரசாங்கமும் அதைச் செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .