2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘வீடுகளை நிர்மாணிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது’

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.கணேசன்

மலையகத்தில் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான அதிகாரத்தை, அரசாங்கம் தனக்கே வழங்கியுள்ளது என்றும் இந்நிலையில், வேறொருவருக்கு வீடமைப்புத் திட்டப் பணிகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும், அமைச்சர் பழனி திகாம்பரம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  

இந்திய அரசாங்கத்தால், கொத்மலை, எல்பொட தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை, பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று (24) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்றத்தில் கறுப்பாகவும் கண்கள் சிவந்த நிலையிலும் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவர், அமைச்சர் சஜித் பிரமேதாஸவிடம் சென்று, 600 வீடுகளுக்கு விண்ணப்பங்களைக் கேட்டுள்ளார் என்றும் அவ்வாறான விண்ணப்பங்கள் தனக்கும் அமைச்சர் இராதாகிருஷ்ணன், திலகராஜ் எம்.பி ஆகியோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார். 

“இதை வைத்துக்கொண்டு தோட்டம் தோட்டமாகவும் வீடு, வீடாகவும் சென்று, இந்த அரசாங்கம் தனக்கு 600 வீடுகளைக் கொடுத்துவிட்டது என்று தம்பட்டம் அடிக்கின்றனர். மலையகத்தில் நான் நினைத்தால் மாத்திரமே, வீடுகளைக் கட்டலாம். மலையகத்தில் வீடுகளை அமைப்பதற்காக, மலைநாட்டு புதிய கிராமங்கள் என்ற அமைச்சை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015ஆம் ஆண்டு எனக்குப் பாரம் கொடுத்தார்.  

“இந்நிலையில், மக்கள் எம்மைத் தேடி வருவதால், நாம் முன்னெடுக்கும் அபிவிருத்தியை நிறுத்துவதற்காக, 600 வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளதென, சிலர் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் கூறி வருகின்றனர்” என்றார்.

“எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். இதைப் புரிந்துகொண்ட மக்கள், எம்மைத் தேடி வருகின்றனர். எனினும் மக்களை திசைத்திருப்புவதற்கான நடவடிக்கைகளில், சிலர் ஈடுபட்டு வருகின்றனர். 

“இவர்களால் ஒரு வீட்டைக் கூட கட்ட முடியாது. அரசாங்கம் எனக்குதான் மலையகத்தில் வீடுகளை அமைப்பதற்கான பொறுப்பை வழங்கியுள்ளது.  

“அதிகார சபையும் எனக்கு கீழ்தான் உள்ளது. நாமே வீடுகளைக் கட்டுவோம். நாம் இந்த அமைச்சைப் பெற்ற பின்பே, மலையகத்தில் கிராமங்கள் உருவாகி வருகின்றன. கூட்டணி சார்பாக சேவைகளை செய்து வருகின்றோம். மலையகத்தில் லயன்களை உடைத்து, தனி வீடுகளை அமைத்து கிராமங்களை உருவாக்குவோம். இந்திய அரசு, வீடு கட்டுவதற்கான நிதியை, நன்கொடையாகவே வழங்குகிறது. 

“ஒரு வீட்டுக்கு, 10 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகின்றது. 16,000 வீடுகளை இந்திய அரசு வழங்கியுள்ளது. 4,000 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன. அடுத்த ஜூன், ஜூலையில் 10,000 வீடுகளுக்கான அடிக்கற்களை நாட்ட உள்ளோம். தோட்டப் பகுதிகளுக்குத் தனி முகவரி தந்த இலங்கை அரசுக்கும் பிரதமருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்” என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X