2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

“பெண்ணின் மரணத்துக்கு தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும்”

Kogilavani   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

ஹப்புத்தளை, ககாகொல்ல தோட்டத்தில், தேயிலை மலையிலிருந்து விழுந்து உயிரிழந்தப் பெண்ணின் மரணத்துக்கு, தோட்ட நிர்வாகமே பொறுப்புக் கூற வேண்டுமென, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த  சின்னையா சாரதா (வயது 52) என்பவர், திங்கட்கிழமை தேயிலை மலையிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

ககாகொல்லை தோட்டம் பிரிவு 3இல், 55 பெண் தொழிலாளர்கள், திங்கட்கிழமை மாலை தொழில்புரிந்துக்கொண்டு இருந்துள்ளனர். இவர்கள், குறித்தத் தோட்டத்தின் தேயிலை மலையில் கொழுந்து பறித்து முடித்தப் பின்னர், வேறொரு மலையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, 54 பெண் தொழிலாளர்கள் மட்டுமே மற்ற மலைக்குச் சென்றுள்ளனர். சாரதா  என்ற மேற்படி பெண், குறித்த மலைக்குச் செல்ல முயன்றப் போது, தேயிலை மலையிலிருந்து பள்ளத்தில் விழந்துள்ளார். இதனை அவதானிக்காது, அவருடன் தொழில்புரிந்த ஏனைய பெண்களும் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தரும் பிரிதொரு மலைக்குச் சென்றுவிட்டனர்.

வேலை முடிந்து ஏனைய பெண்கள் வீடு திரும்பியப் போதிலும் குறித்தப் பெண் மட்டும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அப்பெண்ணை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதே மேற்படி பெண், தேயிலைத் தளிர்களை கைகளில்  அடக்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்துக்கும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,

'பெண்ணின் மரணத்துக்கு, தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும். ஒரு  தேயிலை மலையிலிருந்து பிரிதொரு   மலைக்கு தொழிலாளர்கள் மாற்றப்படும்போது, தொழிலாளர்கள் அனைவரும்  சென்றுவிட்டனரா என, தோட்டக்கள உத்தியோகத்தர்கள் கணக்கிட  வேண்டும். அதனை தோட்ட கள உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளவில்லை.

குறித்தப் பெண், வீடு திரும்பாததை உணர்ந்து,  அவரது குடும்பத்தாரே  தேடியுள்ளனர். பெண்ணின் விடயத்தில், தோட்ட நிர்வாகம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு, உரிய நட்டஈடை தோட்ட நிர்வாகம்,  வழங்க வேண்டும் என்பதுடன், அவரது மூன்று பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செலவீனங்களையும் தோட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.

அத்துடன், உயிரிழந்தப் பெண்ணின்  இறுதிக்கிரியைகளுக்கான முழுச் செலவையும் தோட்ட நிர்வாகமே பொறுப்பேற்கவேண்டும்.

55 தொழிலாளர்களுக்கு,  கள மேற்பார்வையாளராக  ஒருவர் நியமிக்கப்பட்டமை  பிழையான செயலாகும். 25 தொழிலாளர்களுக்கு  ஒரு கள மேற்பார்வையாளர் என்பதே நியதி. எனவே,  தொழிற்சட்டத்தையும் தோட்ட நிருவாகம்  மீறியுள்ளது.

தோட்ட நிர்வாகங்களின் மனித உரிமை மீறலுக்கும், அடாவடித்தனத்துக்கும் ககாகொல்லை தோட்டச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும். இச்சம்பவத்தை, நாடாளுமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டுச் செல்வேன். பெண்ணின் மரணத்துக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பேன்' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .