2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மலையக மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்காவிடின் போராட்டம் தொடரும்: ஸ்ரீதரன்

Sudharshini   / 2015 ஜூன் 08 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச்சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவு அடங்கலாக 1,000 ரூபாயா சம்பளம் அதிகரிக்கும் வகையில் புதிய கூட்டு ஒப்பந்தம் அமைய வேண்டும். இல்லாவிடின் மலையக மக்களின் போராட்டம் தொடரும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைக்கோரி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச்சம்பளம் 450 ரூபாவாகும். அத்துடன் நிபந்தனை கொடுப்பனவுகள்  170 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு நிச்சயமாக கிடைக்கக்கூடிய அடிப்படைச்சம்பளம் 450 ரூபாவாகும்.  எனவே, தோட்டத் தொழிலாளி ஒருவர் 20 நாட்கள் வேலை செய்தாலும் அவருக்கு மாதம் 9,000 ரூபாய் சம்பளம் மட்டுமே கிடைக்கின்றது. நிபந்தனை கொடுப்பனவுகள் எல்லாத் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை. நிபந்தனை கொடுப்பனவுகள் மூலம் தோட்டக்கம்பனிகளே அதிக நன்மையடைகின்றது.

எனவே, கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகின்ற ஒப்பந்தமாகி விட்டது. கூட்டு ஒப்பந்தம் தொடர்பில், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் சார்பாக செயற்பட வேண்டும். கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதாக பாடுகின்ற பாட்டுக்கு ஜால்ரா அடிக்கக் கூடாது. எனவே, புதிய கூட்டொப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டால் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளம் 800 ரூபாவாக அமைய வேண்டும். அத்துடன் ஏனைய கொடுப்பனவுகள் அடங்கலாக 1,000 ரூபாய் சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அடிப்படைச்சம்பளம் அதிகரிக்கப்படும் போதுதான் தொழிலாளர்களின் வருமானம் நிச்சய தன்மையாக இருக்கும். எனவே, இவற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நாம் கவனயீர்ப்புப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்தப்போராட்டத்துக்கு சிலர் இடையூறு விளைவித்த போதும், தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் நாம் வெற்றிகரமாக இந்தப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். தலைவர் திகாம்பரம் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர்களுடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்காக தொடர்ந்து போராடுவோம் என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X