2025 ஜூன் 28, சனிக்கிழமை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் த.மு.கூ. வேட்பாளர்கள் அமோக வெற்றிப் பெறுவார்கள்: ஸ்ரீதரன்

Sudharshini   / 2015 ஜூன் 29 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அமோகமாக வெற்றிப் பெற்று மலையகத்தில் சரித்திரம் படைப்பார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் நானுஓயா காந்தி மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக தேசிய கட்சிகளின் ஒன்றில் போட்டியிட வியூகம் அமைத்து வருகின்றார்கள்.

அவ்வாறு போட்டியிடவுள்ள கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிப் பெறுவது நிச்சயம். இதனை இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழுகின்ற தமிழ் மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். தொழிலாளர் தேசிய சங்கத்தைப் பொறுத்த வரையில் சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான திகாம்பரம் மலையகத் தமிழ் மக்களுக்குக் குறுகிய காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.

ஏழு பேர்சஸ் காணி, தனிவீட்டுத்திட்டம் மலையகத் தமிழ் மக்களுக்கு வேண்டும் என்ற நிபந்தனை விதித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் இன்றைய ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சை மீண்டும் பெற்று மலையகத்தில் முதற்கட்டமாக அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி வீட்டுத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து அந்தத் திட்டம் இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1977ஆம் ஆண்டு முதல் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களால் மலையகத்துக்குச் செய்ய முடியாததைக் குறுகிய காலத்தில் அமைச்சர் திகாம்பரம் செய்து காட்டியுள்ளார்.

ஆகவே, தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு மலையகத் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து நேர்மையாக சேவையாற்றுவதற்கு மலையகத்தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .