2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பெருந்தோட்ட மாணவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் உள்வாங்கப்பட வேண்டும்

Kogilavani   / 2015 ஜூலை 03 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

'பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளும் அரசாங்க உத்தியோகத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்பNது எனது கனவு. அதற்காக திட்டமிட்ட அடிப்படையில் செயற்படவுள்ளேன்' என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனத்தின் மூன்றாம் கட்டம், நேற்று மாலை வியாழக்கிழமை(2) மாலை, நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் சௌமிய கலையரங்கத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதன்போது 158 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்தகுமார் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள், எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அரசாங்க உத்தியோகஸ்தர்களாக உருவாக்கப்பட வேண்டும். இதுவே எனது நீண்ட நாள் கனவு. அதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. எமது தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளும் தோட்ட தொழிலாளர்களாகவோ அல்லது வீடுகளில் வேளை செய்பவர்களாகவோ இருக்க கூடாது.

நாங்களும் இந்த நாட்டில் மற்ற சமூகங்களைப்போல அரசாங்க தொழிலில் உள்வாங்கப்பட்டு அரசாங்க உத்தியோகஸ்தர்களாக மாற வேண்டும். இந்த கனவு நனவாக நான் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படவுள்ளேன்.

எமது பிள்ளைகள் கிராம சேவகர்களாக, பொலிஸ் அதிகாரிகளாக, மாவட்ட செயலகங்களிலும் பிரதேச செயலாளர் காரியாலயங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் அவர்களை தயார்படுத்த வேண்டும். அதற்கான முறையான கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதேவேளை எமது பிள்ளைகளும் அரசாங்க தொழிலுக்கு போவதற்கான கல்வியை கற்க வேண்டும்.

எமது சமூகம் இன்று படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றது. இந்த முன்னேற்றம் இன்னும் துரிதமாக்கப்படவேண்டும். அப்படியானால் நாம் கல்வியில் இன்னும் முன்னோக்கி செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. இதனை எமது மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து செயற்பட வேண்டும். கல்வியில் எமது சமூகம் உயரிய இடத்தை அடைய வேண்டும் என்பதே எனது முழு நோக்கம்' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .