2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தொண்டராசிரியர் நியமனம்: தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு

Kogilavani   / 2015 ஜூலை 07 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுஜிதா

தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் தமிழர்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள பாடசாலைகளில் நீண்ட காலமாக தொண்டராசிரியர்கள் சேவையாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் 2006, 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்றபோதிலும் அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவில்லை.

மீண்டுமொரு நேர்முகத் தேர்வு, கடந்த மே மாதம் 21, 22, 23ஆம் திகதிகளில் கண்டி, பல்லேகலையிலுள்ள மத்திய மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதில், மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டராசிரியர்கள் பங்கேற்றனர்.

மத்திய மாகாண பாடசாலைகளில் சேவையாற்றும் தொண்டராசிரியர்கள் தொடர்பான விபரங்களை திரட்டுவதற்கான கடிதங்கள், சகோதர மொழி ஆசிரியர்கள் பணியாற்றும் பாடசாலைகளுக்கே அனுப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலையிலேயே, நடந்து முடிந்த நேர்முகத் தேர்வின் போது தமிழர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

தொண்டராசிரியர்களின் நிரந்தர நியமனத்துக்கான தகைமைகளாக க.பொ.த. (சா{த) பரீட்சையின் ஒரே அமர்வில் குறைந்தது 6 பாடங்கள் (3 சி உட்பட) சித்தியடைந்திருப்பதுடன் 2005ஆம் ஆண்டு சேவையாற்றி இருத்தல் கட்டாயமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் நேர்முகத் தேர்வை நடத்தியோர் சேவைக் காலத்தை கருத்திற் கொள்ளாது க. பொ.த(உஃத) பெறுபேறுகளுக்கே முன்னுரிமை வழங்கியதாக தெரியவருகிறது. இதன் காரணமாக 7 வருடங்களுக்குமேல் சேவையாற்றி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.     

நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட சிங்களமொழி மூல ஆசிரியர்களுக்கு தாம் சேவையாற்றிய பாடசாலைக்கே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த 4ஆம் திகதி முதல் ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  எனவே பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

இதுதொடர்பில், மத்திய மாகாண கல்வி அமைச்சரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் முயற்சி பலனளிக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .