2025 ஜூன் 26, வியாழக்கிழமை

த.மு.கூ.இல் இ.தொ.கா.வை இணைக்க முடியாது

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.செல்வராஜா 

தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை இணைத்துகொள்வது என்பது இயலாத விடயமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளருமான அ.அரவிந்தகுமார் தெரிவித்தார். 

'மலையக மக்கள் முன்னணி தமது தனித்துவத்தை என்றும் விட்டுக்கொடுத்தது கிடையாது. ஐக்கிய தேசிய கட்சியுடன் நாம் சரணடைந்துவிடவில்லை. தேர்தல் காலங்களில் கட்சிகள் கூட்டிணைந்து போட்டியிடுவது இயல்பானது' என்றும் அவர் தெரிவித்தார்.

'எமது சமூக பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கும்; பொருட்டு, நாம் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடுகின்றோம். அத்துடன், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன ஒன்றிணைந்து, மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். 

இக்கூட்டணியின் தலைமைகள் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் நுவரெலியாவில் 3 ஆசனங்களும் கொழும்பில் 2 ஆசனங்களும் கண்டியில் ஒரு ஆசனமும் பதுளையில் ஒரு ஆசனமும் கேகாலையில் ஒரு ஆசனமும் இரத்தினபுரியில் ஒரு ஆசனமுமாக ஒன்பது ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளுமுகமாகவே ஐக்கிய தேசிய கட்சியுடன் போட்டியிடுகின்றோம். 

இவ் ஆசனங்கள் பெறப்படும் பட்சத்தில் போனஸ் ஆசனம் ஒன்றும் எமக்கு வழங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பீடம் இணங்கியிருக்கின்றது' என்றார்.

வடக்கு,கிழக்கு மாகாண மக்களுக்காக தமிழத்; தேசிய கூட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டதோ அதுபோன்றே தமிழ் முற்போக்கு கூட்டணியும். இரு அமைப்புக்களின் இலக்குகளும் குறிக்கோளும் ஒன்றாகவேயுள்ளன. எமது கூட்டணியுடன் மலையகத்தின் சிறுசிறு தொழிற்சங்க அரசியல் அமைப்புக்களும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னால் ஜனாதிபதியை ஆதரித்தது. எமது மக்களையும் அவரையே ஆதரிக்கும்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியிருந்தது. ஆனால் எமது மக்கள் அக்கோரிக்கையை நிராகரித்தனர். 

நடைபெறப்போகும் தேர்தலுக்கு பின்னர் கூட்டணியின் தலைமை பீடத்தினர் கூடி ஆராய்ந்த பின்னரே, மலையகத்தின் சிறிய தொழிற்சங்க அரசியல் அமைப்புக்கள் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனாலும் எமது மக்களின் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசை இணைத்து கொள்வதுதென்பது இயலாத விடயமேயாகும்' என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .