2025 ஜூன் 25, புதன்கிழமை

மஹிந்தவின் அரசியல் கடவுச்சீட்டை இரத்துச்செய்வார்கள்

Kogilavani   / 2015 ஜூலை 20 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா  

மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் அரசியலில் பிரவேசித்துள்ளார். இந்த தேர்தலுடன் அவரது அரசியல் கடவுச்சீட்டை இல்லாமல் செய்வதற்கு மக்கள் ஒன்றிணைவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்' என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

'நாட்டு மக்களின் பொருளாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட ஐந்து வகையான அபிவிருத்திகளை மேற்கொண்டு, நவீன இலங்கையை உருவாக்க ஐந்தாண்டு வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளோம். இதனை நடைமுறைப்படுத்த நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் ஐ.தே.க., அமோக வெற்றியடைய வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹாலி-எல பொது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார கூட்டத்தின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,   

'நாட்டுக்கு உயிரூட்டுமாறு மஹிந்த ராஜபக்ஷ மக்களை கேட்டுவருகின்றார். பத்து வருட ஆட்சிக்காலத்தில்  நாட்டு மக்களுக்கு மேம்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது அவரது உரையின் மூலம் வெளிப்படையாகின்றது. அவரது காலத்தில் அவரது கூட்டத்தினரே சுகபோக வாழ்க்கையை அனுபவித்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ, நாட்டுக்கு உயிரூட்ட வேண்டிய அவசியமில்லை. அவருக்கு சேலைன் ஊட்டவேண்டியதே, தற்போதைய அவசியமாகும்.
நடைபெறவுள்ள பொது தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைந்ததும், தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன். தோட்ட தொழிலாளர்களுக்கு ஏழு பேர்சஸ் காணி வழங்கும் விசேட செயற்பாடுகள், தற்போதைய நிலையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது ஐந்தாண்டு வேலைத்திட்டத்தில் காணி வழங்கும் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை மாவட்டத்திலுள்ள ஐந்து தமிழ்ப் பாடசாலைகளை விஞ்ஞான பாடசாலைகளாக தரமுயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நல்லாட்சியின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். அத்தியவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். குறைக்க முடியாதிருந்த எரிபொருள் விலையையும் குறைத்துள்ளோம். சிறு தேயிலை தோட்டங்களின் அபிவிருத்தி கருதி, நிவாரண உதவிகளை வழங்கியுள்ளோம். இந்நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தேவையான நிதி செப்டெம்பர் மாதம் வரை இருப்பில் இருக்கின்றது.

இளைஞர், யுவதிகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் முகமாக சகல வசதிகளுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பழச்செய்கையை ஊக்குவிக்கவும் சிறு விவசாயிகளை ஊக்குவிக்கவும், அரசு ஏற்பாடுகளை செய்து வருகின்றது' என்றார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .